twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூத்த நடிகை ராஜசுலோசனா மரணம்.. நாளை இறுதிச் சடங்கு-ஜெயலலிதா இரங்கல்!

    By Super
    |

    Raja Sulochana
    சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரான ராஜசுலோசனா இன்று சென்னை மடிப்பாக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 77.

    தமிழகத்தின் பெருமைமிக்க கலைஞர்களான மறைந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என சாதனையாளர்களுடன் நடித்தவர் ராஜசுலோசனா.

    1935-ம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த பெஜவாடாவில் பிறந்தவர் ராஜசுலோசனா. அவரது இயற்பெயர் ராஜீவலோசனா. அதைத்தான் பின்னர் சினிமாவுக்காக ராஜசுலோசனா என மாற்றிக் கொண்டார்.

    1953-ல் அவர் நடித்த முதல் படம் குணசாகரி வெளியானது. தொடர்ந்து அவர் நடித்த ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், படித்தால் மட்டும் போதுமா, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்ற படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

    குறிப்பாக கைதி கண்ணாயிரம் படத்தில் ராஜசுலோசனா பாடிய கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும் வஞ்சகளின் உள்ளம் வலை விரிக்கும்... பாடலும், எம்.ஜி.ஆர். ஜோடியாக நல்லவன் வாழ்வான் படத்தில் பாடிய குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா... என்ற பாடலும் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

    எழுபதுகளில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எம்ஜிஆரின் இதயக்கனியில் அவரது வேடம் பெரிதும் பேசப்பட்டது.

    ரஜினி நடித்த காயத்ரியில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்கள் வரை நடித்த ராஜ சுலோசனா, சென்னை மடிப்பாக்கத்தில் சதாசிவ நகரில் வசித்து வந்தார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

    புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்திய ராஜ சுலோச்சனா, ஏராளமானோருக்கு நடனமும் கற்றுத் தந்துள்ளார்.

    உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜசுலோசனா இன்று அதிகாலை மரணமடைந்தார்.

    இவரது கணவர் பெயர் சிஎஸ் ராவ். இவர்களுக்கு தேவி, ஸ்ரீ என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இரட்டை குழந்தைகள். ஷாம்சுந்தர் என்ற மகனும் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருக்கிறார். ராஜசுலோசனா மரணம் அடைந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு சென்னை வந்து கொண்டு இருக்கிறார். நாளை மார்ச் 6-ம் தேதி அவரது இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.

    மூத்த நடிகையான ராஜசுலோசனா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

    ஜெயலலிதா இரங்கல்:

    ராஜசுலோச்சனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், பழம்பெரும் திரைப்பட நடிகை ராஜசுலோச்சனா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    "அரசிளங்குமரி", "படித்தால் மட்டும் போதுமா" "வணங்காமுடி" போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்ற ராஜசுலோச்சனா 275-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ் குமார் போன்ற முன்னணி திரைப்பட நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். சென்னையில் "புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்' என்னும் நாட்டியப் பள்ளியை துவக்கி நாட்டிய கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    திரைப்படத் துறையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் ராஜசுலோச்சனா. இவர் தனது அபார நடிப்பின் மூலம் திரைப்பட உலகில் புகழின் உச்சியை எட்டியவர். இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அனைவருடனும் அன்புடன் பழகும் தன்மையானவர்.

    ராஜசுலோச்சனாவின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறைக்கும் மிகப் பெரிய இழப்பு ஆகும். ராஜசுலோச்சனாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் என்று கூறியுள்ளார்.

    Read more about: மரணம் tamil cinema
    English summary
    Vereran actress Raja Sulochana was passed away on Tuesday morning at her Madippakkam residence.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X