நல்லகண்ணு மறைவு.. கலங்கியபடி வந்து அஞ்சலி செலுத்திய விஜய்.. மனுஷன் நொறுங்கிட்டாரு
சென்னை: தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், கம்யூனிஸ்ட்டுமான நல்லகண்ணு உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 101. அவரது உயிரிழப்பு அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்நிலையில் நடிகர்கள் விஜய்யும், சிவகார்த்திகேயனும் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தமிழ்நாட்டில் அனைவரது அபிமானத்தையும் பெற்ற அரசியல் தலைவர் ஆவார். ஏராளமான போராட்டங்களையும், ஒடுக்குமுறைகளையும் சந்தித்த அவர்தான் கம்யூனிஸ்ட் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார். அவர் கடந்த வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்துவிட்டார். அதன் காரணமாக தலையில் காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி: அதனையடுத்து நந்தனத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டு தலையில் தையலும் போடப்பட்டது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டன. எப்படியாவது மீண்டு விடுவார் என்று எல்லோரும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அங்கேயும் தீவிர சிகிச்சை: தொடர்ந்து அங்கேயும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பலனாக கொஞ்சம் உடல்நலம் தேறியிருந்தார். சூழல் இப்படி இருக்க பிப்ரவரி ஒன்றாம் தேதி மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது. கடந்த இருபது நாட்களுக்கு மேலாக அங்கே சிகிச்சையில் இருந்தார் தோழர் நல்லகண்ணு.
உயிரிழந்த நல்லகண்ணு: நிலைமை இப்படி இருக்க வயது மூப்பு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் முழு பலனையும் கொடுக்கவில்லை. அதன் காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இனிமேல் இதுபோன்ற ஒரு அரசியல் தலைவரை எந்தக் காலத்திலும் பார்க்கவே முடியாது என்பது ஒட்டுமொத்த பேரின் கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், சிவகார்த்திகேயன் அஞ்சலி: அவரது உடல் சென்னையில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அந்தவகையில் நடிகர்கள் விஜய்யும், சிவகார்த்திகேயனும் கலங்கியபடி நேற்றிரவு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், "சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.

அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" என குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் சிவகார்த்திகேயனும் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக அரசியல் வரலாற்றிலேயே எளிமையும் நேர்மையும் இணைந்த ஒரு உயர்ந்த மனிதர் - தோழர் நல்லகண்ணு ஐயா. மக்களின் உரிமைக்காக வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த போராளி. பொதுமக்களின் குரலாகவும், உழைக்கும் சமூகத்தின் நம்பிக்கையாகவும் திகழ்ந்தவர். அரசியலில் எளிமையாக வாழ்வதும் சாத்தியமே என்று வாழ்ந்து காட்டியவர்.
தோழர் நல்லகண்ணு ஐயா அவர்களின் மறைவு மானுட சமூகத்தின் பேரிழப்பு. இத்தகைய மகத்தான மனிதரின்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே நான் அடிக்கடி அவரை சந்தித்தேன், ஐயா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்த்திருப்பதே பெரும்பேறு இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவரது கொள்கைகளும் போராட்ட வரலாறும் என்றும் நம்மை வழிநடத்தும், நூற்றாண்டு கண்ட ஐயாவின் புகழ் இன்னும் பல நூற்றாண்டு நிலைத்திருக்கும்" என இரங்கல் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications