லதாவா? சுமனா? என குழம்ப வைத்த குரல்.. பழம்பெரும் பாடகி சுமன் கல்யாண்பூர் உயிரிழப்பு!
சென்னை: இந்தி சினிமாவில் பிரபலமான பாடகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் சுமன் கல்யாண்பூர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது தனது 89. கடந்த சில மாதமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மும்பை லோகண்ட்வாலாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது மறைவு இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லதாவா... சுமனா?: 1960களில் இந்தி சினிமாவின் இசை உலகம் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோரின் ஆதிக்கத்தில் இருந்தபோதும், பாடகி சுமன் கல்யாண்பூர் தனது இனிமையான குரலால் மக்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்தார். ஆனால் அவரது குரல், லதா மங்கேஷ்கர் குரல் போலவே இருந்ததால், பல பாடல்களை ரசிகர்கள் லதா பாடியதாகவே நினைத்தனர். அந்தக் காலத்தில் ஒரு பாடலுக்கு லதா மங்கேஷ்கர் ரூ.100 சம்பளம் வாங்கியதாலும், அவரது கால்ஷீட் கிடைக்காத நேரங்களில் பல இசையமைப்பாளர்கள் சுமன் கல்யாண்பூரை அணுகினார்கள். இசையமைப்பாளர் பர்மனுடன் லதா மங்கேஷ்கருக்கு ஏற்பட்ட பிரச்சினையால், 'Na Tum Humein Jaano' பாடலை சுமனை பாட வைத்தார்.

சுமன் கல்யாண்பூர்: மும்பையில் பிறந்த சுமன் கல்யாண்பூர், சிறுவயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால், வீட்டில் இருந்த கட்டுப்பாடுகளால் வீட்டிற்குள்ளேயே இருந்ததால், பாடல்களே அவரது உலகமாக மாறியது. அப்படித்தான் முதல் முறையாக மராத்தி படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களை பாடி திரையிசையில் தனக்கென ஒரு தடத்தை பதித்தார். இசையமைப்பாளர் உஷா கன்னாவின் இசையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்தி, மராந்தி மொழியில் பல பாடல்களை பாடி உள்ள இவர் 1986 ஆம் ஆண்டில் இசைத்துறையிலிருந்து விலகினார்.

லதா மங்கேஷ்கரின் நிழலில் வாழ்ந்தாலும், தனது இனிமையான குரலால் ரசிகர்களின் இதயங்களில் தனி இடம் பிடித்த சுமன் கல்யாண்பூரின் நேற்றிரவு உயிரிழந்தது பலரை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது பாடல்கள் என்றும் இசை ரசிகர்களின் நினைவுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.


Click it and Unblock the Notifications