மார்கழியில் மக்களிசை.. பறையுடன் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், கனிமொழி எம்.பி.. அடி தூள் கிளப்புறாங்க
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் மார்கழியில் மக்களிசை இந்த ஆண்டு 6வது ஆண்டாக நடைபெறுகிறது. இன்று தொடங்கி அதாவது டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி, வரும் 28ஆம் தேதி வரை என மொத்தம் மூன்று நாட்கள் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் பா. ரஞ்சித்துடன் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் அனைவரும் பறை இசைத்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, இந்த மேடையில் இருந்து பலரும் சினிமாவுக்கு வந்துள்ளனர். ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியை, இந்த மேடையை அனைவரும் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பேசும்போது, நான் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிக்கு வந்து கொண்டு இருக்கிறேன். மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தெரிந்தாலே, நான் அங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டு விடுகிறது என்று பேசினார்.

அரசியல்: அடுத்து பேசிய வெற்றி மாறன், மார்கழியில் மக்களிசை என்பது, இந்த கலைஞர்களை சினிமாவுக்கு நகர்த்தும் மேடை இல்லை. இது இந்த சமூகத்தை செதுக்கும் அரசியல் மேடை. இங்கு பாடப்பட்ட வீரியமான பாடல்கள் மற்றும் அந்த கலைஞர்களுடன் நாம் நிற்க வேண்டியது நமது கடமை. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒரு அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அது மிகவும் முக்கியமானதும் கூட. இப்படி இருக்கும்போது, நீலம் பண்பாட்டு மையத்திற்கு பா. ரஞ்சித்தும் நாம் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.
பறை: மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், இந்த மேடையில் என்னிடத்தில் பறையை கொடுத்து அடிக்கச் சொல்லி விட்டார்கள். பறை நம்முடையது, நமது கலைகள் தொடங்கி, இசைக்கருவிகள் வரை பலவற்றை நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டார்கள். அவற்றை எல்லாம் மீட்டுக் கொண்டு வரும் மேடையாக இது உள்ளது" என்று பேசினார். இவர்களின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











