எழுத்துப் பிழைகளுக்கு விடுதலை கொடுத்த விடுதலைப்பட பாடல்.. என்ன செய்கிறார் இளையராஜா?
சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை. வெற்றி மாறன் இயக்கத்தில் படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் கைப்பற்றியுள்ளது.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பான ஸ்பீச் கொடுத்தனர்.

விடுதலை படம்
நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மேலும் படத்தில் பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கவுதம் மேனன், சேத்தன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இசை -ட்ரெயிலர் வெளியீடு
இந்தப் படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் படத்தின் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர். 8 நாட்கள் மட்டுமே சூட்டிங் என்று தன்னை அழைத்துச் சென்று ஏமாற்றி வெற்றிமாறன் படத்திற்கான ஆடிஷனை நடத்தியதாக விஜய் சேதுபதி தெரிவித்தார்.

அருட்பெருஞ்சோதி பாடல்
மேலும் வெற்றிமாறனின் அடுத்த படங்கள் வாடிவாசல், வடசென்னை 2 படங்கள் குறித்து சுவாரஸ்யங்கள் பகிரப்பட்டன. படத்தின் பாடல்களும் லிரிக் வீடியோக்களாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. படத்தில் இளையராஜாவின் குரலில் வெளியாகியுள்ள அருட்பெருஞ்சோதி என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இளையராஜா பாடல்
இந்நிலையில் யூடியூபில் ட்ரெண்டாகியுள்ள இந்தப் பாடல் எழுத்துப்பிழைகளுடன் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாடல் வரிகளை பிரித்து எழுதும்போதும் அதை சிறப்பாக செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், அருட்பெருஞ்சோதி என்ற வார்த்தை பாடலின் சில இடங்களில் வருட்பெருஞ்சோதி, மருட்பெருஞ்சோதி, ளருட்பெருஞ்சோதி என்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அருட்பெருஞ்சோதி பாடலில் எழுத்துப்பிழை
இதேபோல தனிப்பெருங்கருணை என்ற வார்த்தையில் ப் என்ற எழுத்து விடுபட்டுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல ஆதியிலுணர்த்திய என்ற வார்த்தையில் ஆதியி என்பது ஒரு சொல்லாகவும் லுணர்த்திய என்பது ஒரு சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருசாரார் வள்ளலார் பயன்படுத்தியது போல வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினாலும், அந்த வார்த்தைகளை உடைத்து பயன்படுத்தும் போது கவனம் வேண்டாமா என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதை இளையராஜா கவனிக்கவில்லையா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ரசிகர்களை கட்டிப்போட்ட பாடல்
எது எப்படியோ வார்த்தை பிரயோகங்களை கவனிக்காமல், ஹெட் செட்டை போட்டுக் கொண்டு, கண்ணை மூடி இந்தப் பாடலை கேட்கும்போது, சப்தநாடிகளும் ஒடுங்கி, கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இளையராஜா மெட்டுக்கு இதுதான் சிறப்பு. அதிலும் ஆன்மீக பாடல்களை வடிவமைக்கும்போது இளையராஜாவை அடித்துக் கொள்ள முடியாது என்றும் கமெண்ட்ஸ் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











