பிடிகொடுக்காத வெற்றிமாறன்.. அடுத்தடுத்து கமிட்டாகும் சூர்யா.. வாடிவாசல் படம் மொத்தமா டிராப்பா?
சென்னை: விடுதலை 1 மற்றும் 2 படங்களை எடுப்பதற்காக இயக்குநர் வெற்றிமாறன் பல ஆண்டுகளை எடுத்துக் கொண்ட நிலையில், அந்த நேரத்தில் வேற இயக்குநர்களுடன் சேர்ந்து நடிகர் சூர்யா அடுத்தடுத்து நடித்து படங்களையும் ரிலீஸ் செய்து வருகிறார். ரெட்ரோ படம் வெளியாகி விட்டது. விடுதலை 2 முடிந்து வெற்றிமாறனும் ரெடியாக இருக்கிறார், கண்டிப்பாக வாடிவாசல் அப்டேட் வந்து விடும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர் தாணுவுக்கு மேலும், அதிர்ச்சியளிக்கும் விதமாக இருவரும் மீண்டும் காலதாமதம் செய்வது அப்செட்டை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தை முடித்து விட்டு ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து நடித்து வரும் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக அவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக ஒப்பந்தம் போடப்பட்டு சமீபத்தில் பழனி மலை முருகன் கோயிலுக்கும் இயக்குநருடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டார்.

வெற்றிமாறனிடம் இப்போதாவது படத்தை ஆரம்பித்து விடலாமா? என சூர்யா நேரடியாகவே கேள்விக் கேட்க இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும் என்றும் படம் முடிக்க 2 ஆண்டுகள் தேவைப்படும் என வெற்றிமாறன் கோரிக்கை வைக்க சூர்யா அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
வாடிவாசல் டிராப்: கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படம் தொடங்கும் என அறிவிப்பு போஸ்டர் வெளியானது. நடிகர் விஜய்யை வைத்து எப்படியாவது படம் இயக்கி விட வேண்டும் என்றும், ஷாருக்கானுக்கும் போய் ஒரு கதையையும் வெற்றிமாறன் சொல்லிவிட்டு வந்தார். ஆனால், இருவரும் அவருக்கு ஓகே சொல்லாத நிலையில், சூர்யா மட்டுமே தலையை ஆட்டினார். ஆனால், அதற்கு முன்னதாக கங்குவா படத்தில் சூர்யா சென்று சிக்கிக் கொண்ட நிலையில், இந்த பக்கம் விடுதலை படத்தில் வெற்றிமாறனும் மாட்டிக் கொண்டார்.
4 வருஷம் ஆகிடுச்சு: இப்படி அறிவிப்பு வெளியாகி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் படப்பிடிப்பே ஆரம்பிக்காமல் இருந்து வரும் நிலையில், சமீபத்தில், நடிகர் சூர்யா எப்போ படத்தை ஆரம்பிக்கலாம் என்றும் எப்போது முடிப்பீங்க என்றும் ஒரே பாகமாக படத்தை எடுத்து முடிப்பீர்களா? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்ப வெற்றிமாறன் தரப்பில் இருந்து சரியான பதில் வராத நிலையில், சூர்யா வணங்கான் படத்தில் இருந்து வெளியேறியது போல வாடிவாசல் படத்தில் இருந்தும் வெளியேறிவிட்டார் என்கின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா: துருவ் விக்ரம் படத்தை முடித்து விட்ட மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷ் உடன் ஒரு படம் பண்ணப் போவதாக அறிவிப்பு போஸ்டர் வெளியானது. ஆனால், தனுஷ் இதே போல பல படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார். நடிகர் சூர்யா வெங்கி அட்லூரி படத்தை முடித்து விட்டு தாணுவிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை சரி செய்ய மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்கின்றனர்.
சிம்புவை இயக்கும் வெற்றிமாறன்: அதே போல வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 படத்தில் தற்போது தனுஷ் நடிக்க மாட்டார் என்றும் இந்தி படம், தமிழ் படங்கள் என முந்தைய லைன் அப்பை முடித்து விட்டே வருவார் என்பதால், சிம்புவை வைத்து வெற்றிமாறன் ஒரு படம் தாணுவுக்கு பண்ணிக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர். சூழல் இப்படியிருக்க வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதாகவே கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











