Vetrimaaran - தெலுங்குக்கு செல்கிறாரா வெற்றிமாறன்?.. உண்மை என்ன தெரியுமா?
ஹைதராபாத்: Vetrimaaran (வெற்றிமாறன்)ஜூனியர் என்.டி.ஆருடன் இணையவிருப்பதாக தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து வெற்றிமாறன் விளக்கமளித்திருக்கிறார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்களாக இருக்கின்றனர். சாமானியர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களே அவருக்கு ரசிகராக இருக்கின்றனர். ஏனெனில் அவரது ஒவ்வொரு படத்திலும் அவ்வளவு டீட்டெயிலிங் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை: வெற்றிமாறன் சமீபத்தில் விடுதலை படத்தை இயக்கினார். சூரி, விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழக நக்சல்பாரிகள் குறித்தும், தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் அந்தப் படம் உருவாகியிருந்தது. வழக்கம்போல வெற்றிமாறனின் இந்தப் படமும் பெரும் உரையாடலை ஆரம்பித்து வைத்திருக்கிறது.
விடுதலை 2: விடுதலை படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வரவேற்பை பெற்ற சூழலில் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இன்னும் நான்கு மாதங்களில் வெளியாகும் என கூறப்பட்ட விடுதலை 2 இப்போது டிசம்பர் மாதம் வெளியாகவிருப்பதாகவும், சில காட்சிகளை வெற்றிமாறன் ரீ ஷூட் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தது என்ன?: விடுதலை படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை தொடங்கவிருக்கிறார் வெற்றிமாறன். வாடிவாசலை முடித்துவிட்டு வடசென்னை 2 தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவில் வெற்றிமாறனே கூறியிருந்தார். ஆனால் இதற்கிடையே அவர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கப்போவதாக சமீபகாலமாக தகவல்கள் சிறகடித்தன.
ஜூனியர் என்.டி.ஆருடன் படமா?: அதேசமயம், வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பல வருடங்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். தனுஷும் ஒரு மேடையில் வெளிப்படையாகவே வடசென்னை 2 எப்போது என கேட்டேவிட்டார். இதனால் ஜூனியர் என்.டி.ஆருடன் வெற்றிமாறன் படம் செய்வது சந்தேகமே. வடசென்னை 2வை முடித்த பிறகு அடுத்த ப்ராஜெக்ட்டுக்குள் செல்வார் எனவும் தகவல் வெளியானது.

இப்போதைக்கு இல்லை: இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்குவது தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார் வெற்றிமாறன். அவர் பேசுகையில், "ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்தேன். ஸ்டார் வேல்யூ மற்றும் காம்பினேஷன் மதிப்பிற்காக ஒரு நடிகருடன் நான் இணைவதில்லை. நான் எழுதும் திரைக்கதை ஜூனியர் என்.டி.ஆர் போன்ற நடிகரை கேட்கும்போது அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அதற்கு இன்னும் கால அவகாசம் தேவை" என்றார்.


Click it and Unblock the Notifications











