Vetrimaaran - வெற்றிமாறன் இயக்கும் பயோபிக்?.. சிக்கலில் சிக்குவாரோ?.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) வெற்றிமாறன் பயோக் பிக் ஒன்றை எடுக்கவிருப்பதாகவும் அதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிஅய் விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார்.

தவறாக சித்தரித்த வெற்றிமாறன்?: அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.
அசுரன் வெற்றிமாறன்: முதல் மூன்று படங்களிலேயே உச்சம் சென்றாலும் வெற்றிமாறன் அசுரன் படம் மூலம் சமூகத்தில் பஞ்சமி நிலம் குறித்து மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கி வைத்தார். அதுமட்டுமின்றி நாவலை மையமாக வைத்து வெற்றிப்படங்களை கொடுக்கலாம் என்ற ஃபார்முலாவையும் அனைவரிடமும் கொண்டு சேர்த்தார். அசுரன் படம் வெக்கை என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
விடுதலை: இதனையடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படம் இயக்குவதற்கும், விஜய் சேதுபதி, சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்குவதற்கும் கமிட் ஆனார். வாடிவாசல் படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் குறுநாவலையும், விடுதலை படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையையும் அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் விடுதலை படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு வாடிவாசலுக்கு செல்லலாம் என திட்டமிட்டு விடுதலையை தொடங்கினார். ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்குகிறார் வெற்றி. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே அசுரன் படத்தில் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
அடுத்த படம்: விடுதலை 2ஐ முடித்த பிறகு வாடிவாசல், வடசென்னை 2வை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.அதன்படி பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் வாழ்க்கையை வெற்றிமாறன் சினிமாவாக எடுக்கப்போகிறார் என்றும் அதில் தனுஷ் நடிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சவுக்கு சங்கர் அரசாங்கத்துக்கு எதிராக பேசக்கூடியவர். அவரது பேச்சில் பல விஷயங்களில் உண்மை இருந்தாலும் பல விஷயங்கள் நம்பும்படியாக இருக்காது. அதேபோல் அவரது பேச்சுக்கு கடுமையான கண்டனங்களும் எழுந்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க அவரது வாழ்க்கையை வெற்றிமாறன் படமாக எடுத்தால் ஒருவேளை சிக்கலை சந்திக்கலாம். அதுமட்டுமின்றி அந்தப் படம் வெளியாகும்போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் நெருக்கடி கொடுக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
எனவே அதையெல்லாம் வெற்றிமாறன் சமாளிப்பாரா?.. முக்கியமாக சவுக்கு சங்கர் வாழ்க்கையை படமாக எடுக்கும் அளவுக்கு அவர் இன்னும் எதையும் சாதிக்கவில்லை. ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார். ஆனால் அவர் மீதே பல விமர்சனங்கள் இருக்கின்றன. நிலைமை இவ்வாறு இருக்க வெற்றிமாறனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











