Vetrimaaran - பெரியார், அம்பேத்கர், காமராஜர் மட்டும் போதுமா?.. விஜய் பேச்சுக்கு வெற்றிமாறன் என்ன சொல்கிறார்?
சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) விஜய் நேற்று பேசியது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் தனது கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
லியோ படத்தில் நடித்துவரும் விஜய் அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் தற்போது பங்கேற்றுள்ளார். சமீபத்தில் 2000 டான்ஸர்களுடன் அவர் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டது.படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.முதன்முதலாக வெளியிடப்பட்ட க்ளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் ஹிட்டடித்ததாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

விஜய் கல்வி விருது வழங்கும் விழா: இந்தச் சூழலில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்திக்க முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்று நீலாங்கரையில் வைத்து அவர்களையும், அவர்களது பெற்றோரையும் சந்தித்தார். விஜய் கல்வி விருது வழங்கும் விழா என்ற பெயரில் நடந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழையும், ஊக்கத்தொகையையும் வழங்கினார்.
செம ட்ரெண்ட்: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்தார். மேலும் பலருடன் அவர் மேடையில் நடந்துகொண்ட விதம் இணையத்தில் படு ட்ரெண்டானது. விஜய் ரொம்பவே எளிமையாக இருக்கிறார் அதனால்தான் இந்த உயரத்துக்கு அவரால் வர முடிந்திருக்கிறது என பலர் கூறினர். அதேசமயம் இது அப்பட்டமான அரசியல் மூவ் என்றும் ஒரு சிலர் விமர்சனத்தையும் முன்வைக்க தவறவில்லை.
விஜய் பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய விஜய், "தேர்வில் வெற்றி பெறாதவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுக்கு தைரியத்தை கொடுங்கள். குணத்தை இழந்தால் அனைத்தையுமே இழந்த மாதிரி. இதற்கு பிறகு நீங்கள் வெவ்வேறு ஊர்களுக்கு, பள்ளிகளுக்கு செல்லலாம். ஹாஸ்டலில் தங்கி படிக்கும் சூழல் உருவாகலாம். அப்போது ஒரு சுதந்திரம் கிடைக்கும். அந்த சுதந்திரத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தலைவர்களை படியுங்கள்: உங்களால் முடியாது என்று பலர் சொல்வார்கள். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள். உங்களுக்குள் ஒருவனோ, ஒருத்தியோ இருப்பார். அதை கேளுங்கள். பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். பணம் வாங்காமல் வாக்கு அளிக்க வேண்டும்" என பல விஷயங்களை பேசினார். குறிப்பாக தனது பேச்சை ஆரம்பிக்கும்போது அசுரன் படத்தில் வரும் காடு இருந்தா புடுங்கிக்குடுவானுங்க, நிலம் இருந்தா பறிசிக்குடுவானுங்க ஆனா படிப்ப நமட்டேர்ந்து எடுக்க முடியாது" என வசனத்தை பேசினார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது.
வெற்றிமாறன் கருத்து: இந்நிலையில் விஜய் பேசியது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், "சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் போய் சென்றடையும் பொழுது அதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு மிக பெரிய உதாரணம்தான் இது.
அண்ணாவையும் படிக்க வேண்டும்: அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என்று அவர் சொன்னது, அனைவரும் அவர்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











