வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாகும் படம்... எந்த நாட்டுல ஷூட்டிங் நடக்கப் போகுதுன்னு பாருங்க!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எந்த நாட்டில் நடக்க இருக்கிறது என்கிற தகவல் தெரியவந்துள்ளது.
தனுஷ், மஞ்சுவாரியர், டீஜே அருணாச்சலம், பசுபதி, கென் கருணாஸ் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அசுரன்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்ராஜ் இசை அமைத்திருந்தார்.

அசுரன் வெற்றிவிழா
எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் நூறு நாட்களை கடந்து ஓடியது. சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் இதன் வெற்றி விழாவை நடத்தி இருந்தனர். இதில் வெற்றிமாறன், தனுஷ், தயாரிப்பாளர் தாணு உட்பட படக் குழுவினர் கலந்துகொண்டனர். நீண்ட நாளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடந்த நூறாவது நாள் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ரெட் குமார்
இதை அடுத்து சூரி நடிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குனர் வெற்றி மாறன். இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, விண்ணைத்தாண்டி வருவாயா?, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமேன் உட்பட சில படங்களை தயாரித்துள்ளார். முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.

வெளிநாட்டில்
சூரி நடிக்கும் படத்தின் கதை, பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதையில் இருந்து உருவாக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு முழுக்க வெளிநாட்டில் நடக்க உள்ளதாக கூறப்பட்டது. அநேகமாக துபாயாக இருக்கும் என்றும் தகவல் வந்தது. ஆனால், அங்கு இல்லை. கத்தாரில் இதன் ஷூட்டிங் நடக்க இருப்பதாகத் தெரிகிறது.

கத்தாரில் ஷூட்டிங்
இதற்காக படக்குழு மார்ச் முதல் வாரத்தில் கத்தார் நாட்டுக்குச் செல்ல இருக்கிறது. அங்கு கஷ்டப்பட்டு வேலை பார்ப்பவராக நடிகர் சூரி நடிக்க இருக்கிறார். இதற்காக விசா ஏற்பாடுகளை படக்குழு செய்து வருகிறது. இதில் சூரியுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வும் வேகமாக நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

வாடிவாசல்
இந்த படத்தை முடித்த பின் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் வெற்றி மாறன். இந்தப் படத்தை அசுரனை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். சி.சு.செல்லப்பாவின் நாவலை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் கதை ஜல்லிக்கட்டை மையப்படுத்தியது.


Click it and Unblock the Notifications











