சினிமாவில் இரட்டைக் குவளை முறை.. நெத்தியில் அடிச்ச மாதிரி புட்டு புட்டு வைத்த இயக்குநர் ஞானவேல்!
சென்னை: ஜெய் பீம் மற்றும் வேட்டையன் போன்ற படங்களை இயக்கியவர் ஞானவேல். ஜெய்பீம் படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை மைய்யமாகக் கொண்டு உருவாக்கியிருந்தார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. மேலும் தமிழ்நாடு அரசு சில நலத்திட்டங்களை அமல்படுத்தவும் காரணமாக அமைந்தது. தற்போது வெளியாகியுள்ள வேட்டையன் படத்தில் என்கவுன்ட்டர், போலி என்கவுன்ட்டர், நீட் தேர்வு மோசடி, நீட் தேர்வு கோச்சிங் மோசடிகள் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் இயக்குநர் ஞானவேல் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
குறிப்பாக அந்தப் பேட்டியில் அவர் பேசும்போது, எனது நோக்கம் கருத்து சொல்வது கிடையாது. மக்களுடன் உரையாடுவது. நாங்கள் கருத்து சொல்கின்றோம் என எங்களை பொது நீரோட்டத்தில் இருந்து பிரிக்காதீர்கள். அது இரட்டை குவளை முறையைப்போல் ஆகிவிடும். எங்களின் நோக்கமே பொது நீரோட்டத்துடன் கலந்து இருப்பதுதான் என பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது அந்தப் பேட்டியில் அவர் பேசும்போது, " சினிமாவில் மெசேஜ் என்ற பதத்தின் மீதே எனக்கொரு பார்வை உள்ளது. இங்கு சாமி படங்கள் வருகின்றது. அதில் அவர்கள் என்ன சொல்கின்றார்கள், 'நீ இப்படி இருந்தால், இப்படி சாமி கும்பிட்டால், இவ்வாறு நடந்து கொண்டால், குறிப்பிட்ட இடத்தை அடைய முடியும்' எனச் சொல்லுகின்றார்கள். சாமி படம் மட்டும் இல்லை, எல்லா படங்களிலும் ஏதோ ஒன்று சொல்லப்படுகின்றது. சொல்லப்படுவது மெசெஜ் என்றால் எல்லா சினிமாவையும் குறிப்பிடவேண்டும். ஏன் சில படங்களுக்கு மட்டும் மெசேஜ், பிராண்ட் எனக் குறிப்பிடுகின்றீர்கள்?
இரட்டைக் குவளை: நான் மெசேஜ் சொல்லவில்லை. நான் உரையாடத்தான் நினைக்கின்றேன். நான் மெசேஜ் சொல்கின்றேன் என என்னைப் பிரித்துப் பார்ப்பதில் அபாயம் இருக்கின்றது என நான் கூறுகின்றேன். நான் பொது நீரோட்டத்தில் கலக்க விரும்புகின்றேன். பொது நீரோட்டத்தில் இருந்து தனி வழியில் அதனை அணுகுவது, இரட்டைக் குவளை முறையைப்போல் ஆகிவிடும். நீங்க பேசறீங்க. நானும் பேசறேன். நீங்க பேசறது மெசேஜ் இல்லை. நான் பேசறது மட்டும் ஏன் மெசேஜ்னு சொல்றீங்க?

மெசேஜ்: நீங்கதான் காலகாலமாக மெசேஜ் சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். எனது மனதில் நீங்கள் சொன்ன மெசேஜ்தான் உள்ளது. நான் கால் மேல கால் போட்டு உட்காரக்கூடாதுனு எனக்கு ஒரு மெசேஜ் சொல்லி இருக்கீங்க. பெரியவங்ககிட்ட இப்படி நடந்துக்கோங்க, இவனைப்பார்த்த இப்படி நடந்துக்க, அவனைப் பார்த்தா அப்படி நடந்துக்க என எல்லாம் நீங்கள் சொன்ன மெசேஜ்தான். அதனை உள்வாங்கி எனது மனதில் முழுக்க முழுக்க நீங்கள் சொன்ன மெசேஜ்தான் உள்ளது.
10வது நிமிடத்தில்: நீங்கள் சொன்ன மேசேஜை எல்லாம் கேட்ட நான், அவற்றையெல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, எனக்கு வேறு ஒன்று சொல்லவேண்டும் என தோன்றுகின்றது என ஒன்றைச் சொல்லுகின்றேன். உடனே என்னை மெசேஜ் சொல்கின்றேன் என கூறுகின்றீர்கள். இது வணிகத் தளத்திலும் எதிரொலிக்கின்றது. ஆனால் நான் மெசேஜ் சொல்ல வரவில்லை. நான் உங்களுடன் உரையாட வந்துள்ளேன். நீங்கள் நூற்றாண்டாக பேசுகின்றீர்கள், நான் கேட்டுக் கொண்டு உள்ளேன். நான் இப்போதுதான் பேசவே ஆரம்பிக்கின்றேன். நான் பேச ஆரம்பித்த 10வது நிமிடத்தில், 'நீ மெசேஜ் சொல்லுற' என ஏன் சொல்லுகின்றீர்கள்? பொது நீரோட்டம்தான் சரியானது. எல்லாம் சமம் ஆகவேண்டும்". இவ்வாறு அந்தப் பேட்டியில் ஞானவேல் பேசினார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











