Vettaiyan Mistakes: வேட்டையன் படத்தில் ஞானவேல் பண்ண பெரிய தப்பு.. அந்த இடத்தில் கோட்டை விட்டுட்டாரே?
சென்னை: என்கவுன்ட்டர் மற்றும் கல்வி மாஃபியாவை சுற்றிய படமாக வேட்டையன் படத்தை இயக்குநர் ஞானவேல் உருவாக்கியுள்ளார். ரஜினிகாந்த் படமாகவும் அதே நேரத்தில் கருத்து சொல்லும் கதையம்சம் கொண்ட படமாகவும் வேட்டையன் படத்தை கொடுத்துள்ளார்.
தளபதி விஜய் நடித்த கோட் படத்தை போல வெறும் கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகவில்லை என்பதே பெரிய ஆறுதல் தான். ஆரம்பத்தில் டிக்கெட் புக்கிங் பெரிதாக இல்லை என்றும் தொடர்ந்து படம் தீபாவளி வரை குடும்ப ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன் படத்தில் ஏகப்பட்ட பாசிட்டிவான சமூக அக்கறை கருத்துக்களை ஞானவேல் முடிந்தவரை அடுக்கியிருந்தாலும் ஒரு சில இடங்களில் அவர் கொஞ்சம் கோட்டை விட்டது ஜெய்பீம் அளவுக்கு வொர்த்தான படமாக இதை பார்க்க முடியவில்லை என்கிற கருத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்துகிறது.
இது ஞானவேல் படம்: ரஜினிகாந்த் படத்தையும் தாண்டி இது ஞானவேல் படமாகவே ரசிகர்களை கவர்கிறது. சும்மா ஆட்டம் பாட்டம் ஃபைட் என ஹீரோ வெறும் மசாலா மாஸை காட்டாமல் மாஸ் காட்ட வேண்டும் என்றாலும் அதற்கு சரியான காரணம் மற்றும் கதை இருக்க வேண்டும். அந்த வகையில் ரஜினிகாந்த் படத்தை தாண்டி ஞானவேல் என்கவுன்ட்டர் மற்றும் கல்வி மாஃபியாவை கையில் எடுத்து போலீஸ் அதிகாரிகள் யாருக்காக போலி என்கவுன்ட்டர்களை செய்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டியுள்ள விதம் பாராட்டுக்குரியது.
பேராசைக்காரர்களின் உலகம்: ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் இந்தியா என சொல்லி விட்டு குழந்தைகளை கஷ்டப்படுத்தும் விதம், அவர்களை மன அழுத்தம் அடையச்செய்வது, நீட் தேர்வு காரணமாக நடக்கும் தற்கொலைகள், ஆன்லைன் ஃபிராடுகள் அதிகரிப்பது, அதனால் பாதிக்கப்படுவது 70 சதவீத ஏழை இந்திய மக்கள் தான் என்றும் "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்கிற வசனத்தை ராணா டகுபதியை வைத்து சொல்ல வைத்த இடமெல்லாம் பேராசை பிடித்த மனிதர்கள் நம் சமூகத்தை எப்படி ஆட்டிப் படைக்கின்றனர். இல்லாத பட்டவர்களின் வயிற்றில் எப்படி அடிக்கின்றனர் என்பதை காட்டியிருக்கிறார் ஞானவேல்.
பெரிய மிஸ்டேக்: படத்தின் மெயின் வில்லனான ராணா டகுபதியின் போர்ஷனை இயக்குநர் ஞானவேல் இன்னமும் ஆழமாகவும் அழுத்தமாகவும் செதுக்காமல் அங்கே ரஜினிகாந்தின் பில்டப்பை ஏற்றிய இடத்தில் தான் படம் அடிவாங்குகிறது. அபிராமியுடன் இணைந்துக் கொண்டு ராணா டகுபதி பேசும் காட்சிகளை மட்டுமே காண்பித்து வில்லன் ஏரியாவை மிரட்டலாக காட்டாமல் கத்தி, பூமி, வேலைக்காரன், துணிவு படங்களில் வரும் கார்ப்பரேட் வில்லனை போலவே டம்மி பீஸாக்கியது ரசிகர்களை அவரது கதாபாத்திரத்தின் மீது பெரிய ஈர்ப்பை ஏற்படுத்த விடாமல் தவிர்த்து விட்டது. பல இடங்களில் படத்தை எச். வினோத் இயக்கி விட்டாரா என்கிற கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை. திடீரென துணிவு படம் தியேட்டரில் ஓடுவது போன்ற உணர்வும் ரசிகர்களுக்கு எழத்தான் செய்கிறது. வங்கிகளில் நடக்கும் பண மோசடியால் லோன் வாங்கி ஏழைகள் படும் கஷ்டத்தை போலவே ஆன்லைன் கல்விக்காக லோன் வாங்கும் கதையையே ஞானவேல் இயக்கியிருக்கிறார்.
கணிக்கக்கூடிய காட்சிகள்: இந்த படத்தை இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லராக முதல் பாதியில் காட்டிய விதம் அருமை. ஆனால், இரண்டாம் பாதியில் வரும் ஒவ்வொரு சீனும் கணிக்கக் கூடிய காட்சிகளாக கிளைமேக்ஸ் வரை நீண்டது படத்திற்கு பல பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. மலையாளத்தில் சமீபத்தில் வெளியான தலவன் படம் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் காட்சிகள் கடைசி கிளைமேக்ஸ் வரை விறுவிறுப்பைக் கூட்டியிருக்கும். வேட்டையன் படத்தின் 2ம் பாதியில் ஆரம்பத்திலேயே வில்லனை காட்டிய இடத்திலே படம் படுத்து விடுகிறது. வில்லன் போர்ஷனிலும் ஏற்கனவே பல படங்களில் பார்த்து பழக்கப்பட்ட காட்சிகள் கடைசி வரை இருப்பதை ஞானவேல் கொஞ்சம் சரி செய்திருந்தால் வேட்டையன் வேறலெவல் படமாக உலக அரங்கில் நின்று பேசியிருக்கும்.


Click it and Unblock the Notifications











