அந்த ஒரு நொடி நான் உடைஞ்சு போயிட்டேன்.. விக்கி கௌசல் இப்படி எல்லாம் அவதிப்பட்டாரா?
மும்பை: சிறந்த நடிகர், பாசமுள்ள மகன் மற்றும் அன்பான கணவர் எனத் தனக்குக் கிடைத்த அத்தனை பாத்திரங்களையும் மிகுந்த பெருமையோடும் பொறுப்போடும் சுமந்து வருபவர் விக்கி கௌஷல். ஆனால், கடந்த ஆண்டு அவர் ஒரு தந்தையான போது, அவருக்குள் மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மற்ற எல்லா அப்பாக்களையும் போலவே, அவரது தோள்களிலும் இப்போது பொறுப்புகள் கூடிவிட்டன; அவரது கண்கள் முழுக்க தனது குழந்தையைச் சுற்றியே கனவுகளும் ஆசைகளும் நிறைந்துள்ளன. இதனால்தான், ஒவ்வொரு முறையும் தனது பச்சிளம் குழந்தையைப் பிரிந்து படப்பிடிப்புக்குச் செல்லும்போது அவர் உணர்ச்சிவசப்படுகிறாராம்.
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், தனது மனைவியும் நடிகையுமான கத்ரீனா கைஃபை விக்கி கௌஷல் மிகவும் நன்றாகக் கவனித்து வருகிறார். இருவரும் இணைந்து சுற்றுலா செல்வது முதல், தங்களது ஆசை மகன் விஹான் கௌஷலுடன் நேரத்தைச் செலவிடுவது வரை, இந்த மூன்று பேர் கொண்ட குடும்பம் தமக்கென ஒரு சிறிய உலகத்தையே உருவாக்கி வைத்துள்ளது.
வேலைக்குச் செல்லும்போது கலங்கும் விக்கி: இதன் காரணமாகவே, வேலைக்கு அதாவது படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில் விக்கியின் மனம் கனத்துப் போகிறது. விஹான் பிறந்தபோது தான் ஆறு வாரங்கள் விடுமுறை எடுத்திருந்ததாகவும், மீண்டும் வேலைக்குத் திரும்பிய அந்த நாளைத் தன்னால் மறக்க முடியாது என்றும் கௌஷல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றில் பேசிய அவர், தனது மனைவியைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்ல தனக்கு மனமே வருவதில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
தேசிய விருது பெற்ற நடிகரான விக்கி கௌஷல், வீட்டை விட்டு சுமார் 230 கி.மீ தொலைவில் நடந்த படப்பிடிப்பிற்காகத் தனது மகனை நான்கு நாட்கள் பிரிந்திருந்தபோது, ஒரு தந்தையாகப் பெரும் குற்ற உணர்வைச் சந்தித்ததாகக் கூறியுள்ளார். "என் இதயமே நொருங்கிவிட்டது போல இருந்தது. அது மிகவும் கடினமான சூழல்" என்று அவர் அந்த நாட்களை நினைவு கூர்கிறார்.

"இப்போதுதான் புரிகிறது" - விக்கி கௌஷல் நெகிழ்ச்சி: மேலும் பேசிய விக்கி, "ஒவ்வொரு நாளும் எனக்குள் பல புதிய உணர்வுகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன, ஏனென்றால் பெற்றோர் என்பது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். 'அடடா, குழந்தை எவ்வளவு சீக்கிரம் வளர்ந்துவிடுகிறது' என்று மற்றவர்கள் சொல்லும்போது, 'என்ன பேசுகிறீர்கள்? உங்கள் குழந்தைக்கு இன்னும் ஒரு வயதுதானே ஆகிறது' என்று நான் நினைப்பேன். ஆனால், அது என்ன என்பதை இப்போதுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
விக்கியின் பெற்றோர் நெகிழ்ச்சி: தான் வெளியே இருக்கும்போது, கத்ரீனா குழந்தையை வளர்ப்பதற்கும், பெற்றோர் என்ற பொறுப்பைச் சரியாகக் கையாள்வதற்கும் பெரிதும் உதவுகிறார் என்று விக்கி பகிர்ந்துள்ளார். ஒரு தந்தையான பிறகுதான், தன்னை வளர்ப்பதற்காகத் தனது பெற்றோர்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்பதைத் தான் உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
"தன் பெற்றோர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்த்துதான் குழந்தை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளப் போகிறது. எனவே, நம்மிடம் இருந்து குழந்தை எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ, அதை வார்த்தைகளால் சொல்வதை விட, நமது செயல்களில் காட்ட வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்" என்று விக்கி கௌஷல் பகிர்ந்துள்ளார். இவரது இந்த எதார்த்தமான கருத்துக்கள் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications