வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.. வரி கட்டுறேன்.. அபராதம்லாம் கட்ட முடியாது.. விஜய் பளிச்!
சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் நுழைவு வரி தொடர்பான நடிகர் விஜய்யின் வழக்கில் நடிகர் விஜய் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
நடிகர் விஜய் ஒரு லட்சம் ரூபாய் அபராத தொகையை கட்டத் தேவையில்லை என அந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அளித்த தீர்ப்புக்கு நீதிபதிகள் ஹேமலதா உள்ளிட்டோர் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.

வரி விலக்கு கேட்டு வழக்கு
வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை இறக்குமதி செய்த நடிகர் விஜய் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் அந்த வழக்கின் தீர்ப்பை தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் வெளியிட்டார். அதில் விஜய்க்கு எதிரான தீர்ப்பு மற்றும் அட்வைஸ் அடங்கி இருந்தது சர்ச்சையை கிளப்பியது.

ஒரு லட்சம் அபராதம்
ரீல் ஹீரோக்கள் ரியலிலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் போன்ற நபர்கள் இப்படி வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்ததே தவறு என்கிற ரீதியில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து அளித்த தீர்ப்பு நடிகர் விஜய்யை மிகவும் அப்செட் ஆக்கியது. மேலும், ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தையும் விதித்து அதனை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

எதிர்த்து வழக்கு
அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் நடிகர் விஜய். அந்த வழக்கை நீதிபதி ஹேமலதா உள்ளிட்ட இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரணை நடத்தியது. விஜய் தரப்பில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்குள் நுழைவு வரி செலுத்துவதாகவும் ஆனால், அபராத தொகை செலுத்த முடியாது என்றும் நீதிபதி சொன்ன தேவையற்ற கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் அவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என நடிகர் விஜய் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அதிரடி தீர்ப்பு
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி சுப்பிரமணியம் விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், அபராதத் தொகை ஒரு லட்சம் ரூபாயை நடிகர் விஜய் கட்டத் தேவை இல்லை என்றும் நுழைவு வரி செலுத்திய ரசீதை விரைவில் சமர்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

விஜய்க்கு வெற்றி
நடிகர் விஜய்யை தேச விரோதி ரேஞ்சுக்கு சித்தரித்து அறிவுரைகள் வழங்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து நியாயமான முறையில் நடிகர் விஜய் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் அவருக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளதாக தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications