Ajithkumar: அஜித்தே.. கடவுளே.. சேப்பாக்கம் மைதனத்தை அலறவிட்ட ரசிகர்கள் - வீடியோ ட்ரெண்ட்!
சென்னை: நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெட்யூல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், போட்டியை நேரில் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள், மைதானத்தில் "அஜித்தே கடவுளே" என கோஷமிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
ஏற்கனவே விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்பட்டு வருகின்றது. விடா முயற்சி படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல்தான் உள்ளது. அந்த பாடலும் அனிருத் பாட்டு போட்டுக் கொடுத்தால்தான், பாடலுக்கான படப்பிடிப்பைத் தொடங்க முடியும். அதேபோல் குட் பேட் அக்லி படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். மேலும் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.

நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டு ரசிகர்கள் எனது படம் பிடித்திருந்தால் வந்து பாருங்கள். முதலில் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என ஒரே அறிக்கையில் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தார். ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுத்து வந்த அஜித் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுத்து வருகின்றார். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி தீபாவளிக்கும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவுள்ளது.
முதலாவது டெஸ்ட்: இந்நிலையில் அஜித் ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியைக் காண நேரில் வந்திருந்தனர். ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவின் வெற்றி பிரகாசமாகிவிட்டது எனக் கூறும் அளவிற்கு இருந்தது. குறிப்பாக, ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் விளாசினார். பும்ரா 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்தியா வலிமை: அதன் பின்னர் முதலாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை 227 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாச இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அசால்ட்டாக ஸ்கோர் குவித்தது. ஆட்டத்தின் மூன்றாவது நாளில், சுப்மன் கில் சதம் விளாசி பின்னர் இந்திய அணியின் கேப்டன் டிக்ளேர் செய்தார். அப்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்திருந்தது. இதனால், இந்திய அணி 514 ரன்கள் முன்னிலை வகித்தது. வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து, 158 ரன்கள் சேர்த்துள்ளது. வங்கதேச அணிக்கு இன்னும் இரண்டு நாட்கள் முழுமையாக உள்ளது. இந்த இரண்டு நாட்களை சரியாக பயன்படுத்தி இலக்கை எட்டினால் வெற்றி பெறலாம். இரண்டு நாட்களில் மீதமுள்ள விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடினால் ஆட்டத்தை டிரா செய்யலாம்.
அஜித்தே கடவுளே: இப்படியான நிலையில் நேற்று ஆட்டத்தை நேரில் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள், வங்கதேச அணி பேட்டிங் செய்துகொண்டு இருந்தபோது, "அஜித்தே கடவுளே" என முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. சமீபத்தில் வெளியான விஜய்யின் கோட் படத்தில் இடம் பெற்ற தல என்ற வசனம் அஜித்தை குறிக்கின்றதா அல்லது தோனியைக் குறிக்கின்றதா என்ற விவாதம் ஏற்பட்டது. படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தல என்பது அஜித்தைத்தான் குறிக்கின்றது எனக் கூறினார். இப்படியான நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் அஜித்தே கடவுளே என ரசிகர்கள் கோசமிட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது அஜித் ரசிகர்கள், வீரர்களிடம் வலிமை அப்டேட் கேட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











