Exclusive Regina: விடாமுயற்சி விபத்து நடந்ததற்கு பிறகு அஜித் எப்படி இருந்தார் தெரியுமா? ரெஜினா ஓபன்!
சென்னை: அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ்க்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டுள்ளார்கள். படத்தின் புரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ரெஜினா கசாண்ட்ரா நமது ஃபிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
விடாமுயற்சி படம் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2024ஆம் ஆண்டுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட படம் ஆகும். இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் அஜர்பைஜானில்தான் நடைபெற்றது. இதனால் அந்த நாட்டின் சீதோஷன நிலை படப்பிடிப்புக்கு பெரும் சவாலை அளித்ததால், படத்தினை திட்டமிட்டபடி எடுத்து முடிக்க முடியவில்லை.

அப்படி இருக்கும்போது, கடும் போராட்டங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் படத்தின் படப்பிடிப்பினை முடித்துள்ளார்கள். படத்தினை இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்து, சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
ரெஜினா: படத்தின் டீசர், டிரைலர், இதுவரை வெளியிடப்பட்ட பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் விடாமுயற்சி படத்தில் நடித்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா, நமது ஃபிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் படம் குறித்தும் அஜித்குமார் குறித்தும் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக படப்பிடிப்பின்போது அஜித்குமார் மற்றும் ஆரவ் சந்தித்த விபத்து குறித்து பகிர்ந்து கொண்டார்.

விபத்து: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட மிகவும் பயங்கரமான விபத்து குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். இதுமட்டும் இல்லாமல், அந்த வீடியோவைப் பார்த்த பலரும் அஜித்க்கும் ஆரவ்-விற்கும் எதாவது ஆகிவிட்டதா? இருவரும் நலமாக உள்ளார்களா? என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருந்தனர். மிகவும் கோரமான அந்த விபத்து குறித்த வீடியோக்கள் இப்போதும் கூட இணையத்தில் உள்ளது.

தைரியம்: இது தொடர்பாக ரெஜினா பேசும்போது, " அந்தக் காட்சியைப் படமாக்கும்போது நான் படப்பிடிப்புத் தளத்தில் இல்லை. நீங்கள் பார்த்த அந்த வீடியோவை இணையத்தில் ரிலீஸ் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் நான் பார்த்தேன். அஜித் மற்றும் ஆரவ் என இருவரும் கைகளில் கட்டுப்போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால் எனக்கு முதலில் ஏன் என்று தெரியவில்லை. அந்த வீடியோவைப் பார்த்த பின்னர்தான், எனக்கு எல்லாம் தெரிந்தது. கொஞ்சம் கூட பயம் இல்லாதவர்களாக அஜித், அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் இருந்ததைப் பார்க்க முடிந்தது. அதிலும் அஜித் சார் பேய் போல வேலை செய்யக்கூடியவர்" எனக் கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











