அக்னி நட்சத்திரம் படத்தில் இணையும் விதார்த் உதயா
சென்னை: நடிகர் உதயாவும், நடிகர் விதார்த்தும் நேர் மாறான குணாதிசயங்களைக் கொண்ட கேரக்டரில் நடிக்கும் அக்னி நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதே மாதிரியான கதாபாத்திரங்களில் தான் முந்தைய அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபுவும் கார்த்திக்கும் நடித்திருந்தனர்.
1988ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக், பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற அக்னி நட்சத்திரம் திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. தற்போது, ஒரு வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக, உதயா, விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு அக்னி நட்சத்திரம் திரைப்படம், முற்றிலும் புதிய கதைத் களத்துடன் பிரம்மாண்டமாக உருவாகிறது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி படத்தை தயாரித்த ஐசரி.கே.கணேஷ், அடுத்தாக அக்னி நட்சத்திரம் படத்தை தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்கப்போவது அறிமுக இயக்குநரான ஷரண். இவர் நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை, துணை இயக்குனராக பணியாற்றியவர்.

விதார்த்
தமிழ் சினிமாவில் மைனா மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி கமர்சியல் படங்கள் மூலம் தன் தோல்விகளை சந்தித்த பிறகு குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு, காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு தனிப்பாதையில் போய்கொண்டிருக்கும் விதார்த் இப்போது புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

உதயா
இயக்குநர் ஏ.எல் விஜய்யின் அண்ணன் உதயாவும் இந்த படத்தில் இணைகிறார். இவர் ஏ.எல் அழகப்பனின் மகன், தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக உத்தரவு மகாராஜா படத்தில் நடித்திருக்கிறார்.

மணிரத்னம்
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் பிரபு இணைந்து நடித்த படம் அக்னி நட்சத்திரம். இப்போதைய அக்னி நட்சத்திரத்திற்கும். மணிரத்னத்தின் திரைப்படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2 கதாநாயகிகள்
இப்படத்திற்காக இரண்டு நாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். இதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எல்.கே.விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய்.ஆர் பிரசாத் இசைக்கு, பா.விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார். வரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications











