Vijayakanth - அவங்க இப்போ வந்தவங்க.. ஆனா நாம அப்படி இல்ல.. விஜயகாந்த் - போண்டா மணிக்குள் இப்படி ஒரு பாசமா?
சென்னை: நடிகர் போண்டா மணி உயிரிழந்த நான்கு நாட்களில் விஜயகாந்த்தும் உயிரிழந்திருக்கிறார். இரண்டு பேருக்குமான பாசத்தை பற்றி போண்டா மணி பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் போண்டா மணி - விஜயகாந்த்துக்குள் எவ்வளவு நேசம் இருந்திருக்கிறது என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது. விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் முதலில் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு அங்கிருந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

இன்று இறுதிச்சடங்கு: கோயம்பேட்டில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் கூடியது. இதனையடுத்து விஜயகாந்த்தின் உடல் தமிழ்நாடு அரசின் அனுமதியோடு இன்று காலை தீவுத்திடலில் வைக்கப்பட்டது. மதியம் 1 மணிவரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கட்சி அலுவலகத்தின் வளாகத்தில் மாலை 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
என்றும் வாழ்வார்: விஜயகாந்த் உயிரிழந்தாலும் அவரது உதவும் குணத்தால் என்றும் வாழ்வார். அந்த குணத்தால் மக்களிடம் நீக்கமற நிறைந்திருக்கிறார். அதற்கு சாட்சிதான் கூடியிருக்கும் கூட்டம். பிரபலங்கள் முதல் சாமானியர்கள்வரை விஜயகாந்த்தால் பயனடைந்தவர்கள் ஏராளம். அப்படித்தான் போண்டா மணியும். போண்டா மணியின் திருமணத்தை நடிகர் சங்கத்தில் வைத்தது என பல உதவிகளை செய்திருக்கிறார்.
போண்டா மணி உயிரிழப்பு: இதற்கிடையே போண்டா மணி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அப்போதுகூட விஜயகாந்த் சார்பில் மணியின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி சாகும்வரை உதவிக்கொண்டே இருந்தார் விஜயகாந்த். தற்போது உதவியவரும் இல்லை; உதவி பெற்றவரும் இல்லை. இந்த சூழலில் விஜயகாந்த் பற்றி போண்டா மணி பேசியிருந்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
போண்டா மணி பேசியது: அவர் அளித்திருந்த பழைய பேட்டி ஒன்றில், "விஜயகாந்த் என்றால் எனக்கு உயிர். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அவரது 25ஆவது ஆண்டு திருமண நாளுக்கு அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது வெளியே அரசியல்வாதிகள் பலர் நின்றுகொண்டிருந்தனர். நடிகன் என்று பார்த்தால் அது நான் மட்டும்தான். காலையிலேயே சென்றுவிட்டேன்.
அவங்க இப்போ வந்தவங்க: யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை பற்றி அவரது மேனேஜர் விஜயகாந்த்திடம் சொல்லியிருக்கிறார். உடனே அவர் முதலில் போண்டா மணியை அனுப்பு என்று கூறியிருக்கிறார். உள்ளே சென்ற நான் அவரிடம், 'என்ன அண்ணே இவ்வளவு பேர் இருக்காங்க என்னை முதலில் கூப்பிட்டுட்டீங்களே' என கேட்டேன்.
அதற்கு அவரோ, டேய் நீதான் டா என் சகோதரன். நம்ம எல்லோரும் சினிமாவுல இருந்து வந்தவங்க. அவங்க எல்லாம் இப்போ வந்தவங்க. நீதாண்டா எனக்கு எல்லாமே என்று சொன்னார். எனக்கு நெகிழ்ந்துவிட்டது. அப்படி சொன்னது மட்டுமில்லாமல் 5,000 ரூபாயை கொடுத்து இதை வெச்சுக்கோ என்று சொன்னார். நினைத்து பார்க்கமுடியாத சம்பவம் அது. அவரை பற்றி பேசினாலே எனது கண்கள் கலங்கிவிடும்" என்று பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











