Manobala - மனோபாலாவின் கடைசி தருணங்கள்.. தேற்றுவதற்கு பாடல் பாடும் மகன் - கலங்க வைக்கும் வீடியோ
சென்னை: Manobala (மனோபாலா) இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் கடைசி தருணம் குறித்த வீடியோ அவரது யூட்யூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சினிமாவை கற்றுக்கொண்டு ஆகாய கங்கை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மனோபாலா. அதனைத் தொடர்ந்து மோகனை வைத்து பிள்ளை நிலா, ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன், விஜயகாந்த்தை வைத்து மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அதேபோல் சில சீரியல்களையும் சின்னத்திரையில் இயக்கியிருகிறார் மனோபாலா.

சமாதான புறா: மனோபாலா எந்த ஈகோவும் இல்லாமல் எல்லோரிடமும் நட்புடன் பழகக்கூடியவர். அவருக்கு சினிமாவில் எதிரிகள் என்று யாருமே கிடையாது என பலர் கூறுவதுண்டு. அதுமட்டுமின்றி திரைத்துறைக்குள் ஏதேனும் பிரச்னை என்றால் சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை குழுவில் மனோபாலா தவறாமல் இடம் பெற்றுவிடுவார். சினிமாவில் இருக்கும் பெரும்பான்மையான சங்கங்களில் பொறுப்பில் இருந்திருக்கிறார் அவர்.
நடிகர், தயாரிப்பாளர்: இயக்குநராக மட்டுமின்றி நடிகராக 300க்கும் மேற்பட்ட படங்களில் ஜொலித்திருக்கிறார். கடைசியாக அவர் லியோ மற்றும் இந்தியன் 2வில் நடித்துவந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தயாரிப்பாளராக சதுரங்க வேட்டை, சதுரங்க வேட்டை 2, பாம்பு சட்டை ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார். காலத்திற்கேற்ப வேஸ்ட் பேப்பர் என்று யூட்யூப் சேனலை தொடங்கியிருந்தார். அதில் பேட்டிகள், தனது திரையுலக அனுபவங்களை பதிவேற்றிவந்தார்.
மனோபாலா மரணம்: அவருக்கு கல்லீரல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அதனையடுத்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவந்தார். எப்படியும் உடல்நலம் தேறிவிடுவார் என அவரது குடும்பத்தினர் நினைத்து வந்த நேரத்தில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலத்தையும் சோகத்தில் தள்ளியது. பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

கடைசி தருணம்: இந்நிலையில் மனோபாலாவின் கடைசி தருணம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மனோபாலா ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றி அவரது மகன், மனைவி, உதவியாளர்கள் இருக்கின்றனர். அப்போது உதவியாளர் ஒருவர், 'வாங்க சார் பாட்டு பாடலாம். நீங்க முதலில் ஆரம்பிங்க' என கூறுகிறார். ஆனால் மனோபாலாவால் பாட முடியவில்லை. மேலும், குயில புடிச்சு கூண்டில் அடைச்சு பாட்டு பாடுவோமா என உதவியாளர் கேட்க அதற்கும் பேசமுடியாமல் அமைதியாக பார்க்கிறார்.
மகன் பாடிய பாட்டு: அவரைத் தொடர்ந்து மனோபாலாவின் மகன் ஹரிஷ் முருகன் பாடல் ஒன்றை மனம் உருக பாடுகிறார். அதனையும் மனோபாலா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு உணவு ஊட்டப்பட்டு நீரும் கொடுக்கப்படுகிறது. இப்படியாக அந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், கலகலவென்று எல்லோரையும் சிரிக்க வைத்த மனோபாலா இப்படி அமைதியாக அமர்ந்திருப்பதை பார்க்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என கூறி கமெண்ட்ஸ்ட் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











