யூட்யூப் லைவில் பிரியாணி மேன் தற்கொலை முயற்சி.. பதறி வந்து தடுத்த தாய்.. அதிர்ச்சி தரும் வீடியோ
சென்னை: சோஷியல் மீடியாவில் கடந்த சில காலமாகவே இர்ஃபானுக்கும், பிரியாணி மேனுக்கும் இடையே பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. இர்ஃபான் பற்றி பிரியாணி மேன் விமர்சிக்க; அதற்கு இர்ஃபான் பதிலடி கொடுக்க என சென்றுகொண்டிருந்த அந்தப் பஞ்சாயத்து இப்போது முற்றிப்போயிருக்கிறது. திடீரென நேற்று பிரியாணி மேன் யூட்யூப் லைவில் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தச் சூழலில் அதனை அவரது தாய் தடுத்த வீடியோ வெளியாகியிருக்கிறது.
ஒருகாலத்தில் புகழ் அடைய வேண்டுமென்றால் ஒன்று பத்திரிகையில் அவரது புகைப்படம் வெளியாக வேண்டும்; இல்லையென்றால் சினிமாவில் இருக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் இப்போது டிஜிட்டல் உலகம் என்பதால் கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோனும்; ஒரு யூட்யூப் சேனல் இருந்தால் போதும் அதில் வீடியோக்களை பதிவேற்றி புகழடைந்து வருகிறார்கள். இது ஒருவகையில் ஆரோக்கியமான போக்குதான். ஆனால் சிலரோ அந்த யூட்யூப் சேனலில் பலவிதமான கண்டெண்ட்டுகளை வீடியோக்களாக பதிவேற்றி வருகின்றனர்.

இர்ஃபான்ஸ் வியூ: தமிழ்நாடு யூட்யூப் சேனல் உலகத்தை பொறுத்தவரை பலர் புகழ் அடைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் இர்ஃபானும் ஒருவர், பிரியாணி மேனும் ஒருவர். ஹோட்டல்களுக்கு சென்று இர்ஃபான் உணவு பற்றிய விமர்சனத்தை பதிவிடுவார். ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் காலம் செல்ல செல்ல அவரது யூட்யூப் சேனலுக்கு சப்ஸ்க்ரைபர்கள் குவிந்தார்கள். அதுமட்டுமின்றி பிரபலங்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இர்ஃபான் பேசும் வீடியோக்களும் பிரபலம்.
ஆரம்பித்த பஞ்சாயத்து: ஒருவர் வெகு விரைவாகவே புகழ் அடைந்தால் அதற்கு ஈடாக சர்ச்சைகளையும் சந்திப்பார் என்ற விதிக்கேற்ப சில சர்ச்சைகளையும் சந்தித்தார் இர்ஃபான். அதில் ஒன்றுதான் கடந்த வருடம் அவர் ஏற்படுத்தியதாக கூறப்படும் விபத்து. அந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். ஆனால் அந்த விபத்தை ஏற்படுத்தியது இர்ஃபான் இல்லை அவரது உறவினர் என்றும் ஒரு பேச்சு உண்டு. இந்த விஷயத்திலிருந்து புது புது பஞ்சாயத்து இர்ஃபானுக்கு ஏற்பட ஆரம்பித்தது.
பிரியாணி மேன்: சூழல் இப்படி இருக்க பிரியாணி மேன் என்ற சேனலை நடத்திவரும் அபிஷேக் என்பவர் சில நாட்களுக்கு முன்பு இர்ஃபான் பற்றியும், அவர் ஏற்படுத்தியதாக கூறப்படும் விபத்து பற்றியும் விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு இர்ஃபானும் ஒரு வீடியோ வெளியிட்டு காட்டமான பதிலடி கொடுத்திருந்தார். தொடர்ந்து இருவரும் மாறி மாறி வீடியோக்களை பதிவேற்றி வந்தனர். இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சூடு பிடித்தது.
தற்கொலை முயற்சி: இந்நிலையில் இந்தப் பஞ்சாயத்தில் தீ வைப்பது போன்று பிரியாணி மேன் ஒரு செயலை செய்தார். நேற்று யூட்யூப் லைவில் வந்த அவர் தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன் என்பவர்தான் என்று சொல்லி தூக்கிட முயன்றார். இதனை லைவில் பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதெல்லாம் அனுதாபம் சம்பாதிக்கத்தான் அபிஷேக் செய்கிறார் என்று காட்டமாக விமர்சனம் செய்து தங்களது கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

காப்பாற்றிய தாய்: அந்த லைவ் வீடியோவை பார்த்தவர்களில் சிலர் உடனடியாக பிரியாணி மேனின் தாய்க்கு ஃபோன் செய்து நடந்தவற்றை சொல்லியிருக்கிறார்கள். உடனடியாக பதறிய தாய் பிரியாணி மேன் தாழிட்டிருந்த அறை கதவை தட்டியதால் அந்த தற்கொலை முயற்சியிலிருந்து வெளியே வந்தார் அபிஷேக்.. தற்போது பிரியாணி மேனை தாய் காப்பாற்றும் வீடியோ அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பிரியாணி மேனை அழைக்கும் தாய், என்ன என்னமோ துப்பட்டாவை வைத்து தூக்கு போட போறியாம் என்று கேட்கிறார். அதற்கு பிரியாணி மேனோ அதெல்லாம் இல்லையே என்று சமாளிக்கிறார். இந்த வீடியோதான் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை. மன அழுத்தம் ஏற்பட்டால் அல்லது தற்கொலை எண்ணம் வந்தால் அதிலிருந்து விடுபட தமிழக அரசின் உதவி மையம் - 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கவும்


Click it and Unblock the Notifications











