Raghava lawrence: பேய் பட இமேஜ்.. ஜிகர்தண்டா 2 குறித்து ராகவா லாரன்ஸ் நம்பிக்கை!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நாளைய தினம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் 1975 காலகட்டத்தையொட்டிய கதைக்களத்தில் உருவாகியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
ஜிகர்தண்டா படம்: இந்தப் படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதையும் இந்தப் படம் பெற்றுத் தந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்கள் கடந்த சில வாரங்களாக சிறப்பாக நடத்தப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்தை மையமாக வைத்துதான் தான் உருவாக்கியதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் உற்சாகம்: இதனிடையே இந்தப் படம் குறித்து தன்னுடைய பேட்டியில் உற்சாகம் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் பழங்குடியின பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபலமாக இருக்கும் ஒரு ரவுடி கலைத்துறைக்குள் வரும்போது என்ன மாதிரியான மாற்றம் ஏற்படுகிறது என்பதை இந்தப்படம் அழுத்தமாகவும் வலி நிறைந்ததாகவும் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதுரை ஸ்லாங் பேசி நடித்த லாரன்ஸ்: படத்தின் க்ளைமாக்சில் 20 நிமிடங்கள் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுக்கும் என்றும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். படத்தில் மதுரை ஸ்லாங்கில் பேசி நடித்தது வித்தியாசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோருடன் நடித்தது புதிய அனுபவத்தை கொடுத்ததாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
பேய் பட இமேஜ்: தான் டான்ஸ், ஆக்ஷன் படங்களை எல்லாம் முயற்சி செய்துவிட்டு பேய் படம் செய்ததாகவும் அதில் ஒரு மெசேஜையும் காமெடியையும் இணைத்து முனி படத்தை முயற்சித்ததாகவும் கூறியுள்ள ராகவா லாரன்ஸ், இந்த பாணி காஞ்சனாவில் நன்றாக ஒர்க் அவுட் ஆனதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேய் படம் செய்தால்தான் வெற்றி பெற முடியும் என் இடத்திற்கு தன்னை கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள லாரன்ஸ், அந்த பேய் பட இமேஜை இந்தப்படம் உடைக்கும் என்றும் உற்சாகம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











