வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்காக பெற்ற ரூ.8000 திருப்பியளித்த நடிகை சில்க் ஸ்மிதா.. சுவாரசிய தகவல்!
சென்னை: நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில் அவர் குறித்த சுவாரசியமான தகவலை காண்போம்.
Recommended Video
தென்னிந்திய சினிமாவில் 1980களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 1979ஆம் ஆண்டு மலையாள படங்களில் அன்கிரெடிட்டட் ரோல்களில் நடித்துள்ளார் சில்க் ஸ்மிதா.
தமிழில் 1980ஆம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக நடித்தார் சில்க் ஸ்மிதா.

பெரும் ரசிகர் பட்டாளம்
தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள நடிகை சில்க் ஸ்மிதா, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சில்க் ஸ்மிதாவுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது.

ஐட்டம் பாடலுக்கு ஆடிய சில்க்
சில்க் ஸ்மிதா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினாலே படம் நிச்சயம் ஹிட் ஆகிவிடும் என்பதால் டாப் நடிகர்கள் பலரும் தங்களின் படங்களில் நிச்சயம் சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு பாடலை கொடுத்து வந்தனர். இதனால் பல படங்களில் சில்க் ஸ்மிதா ஐட்டம் பாடலுக்கு ஆடியுள்ளார்.

1996ஆம் ஆண்டு மரணம்
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் பெரும் பிரபலமாக இருந்த சில்க் ஸ்மிதா 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி நடிகை சில்க் ஸ்மிதா தனது வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார்.

தூக்கிட்டு தற்கொலை
சில்க் ஸ்மிதா மரணமடைந்து சில மாதங்கள் கழித்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது உடம்பில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்தது என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சில்க் ஸ்மிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அவர் குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி வருகிறது.

யோசித்த சில்க் ஸ்மிதா
அதன்படி 1987 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜெர்மணி லண்டன் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்காக நடிகை சில்க் ஸ்மிதாவை, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான பாலன் உட்பட பல பிரபலங்கள் அழைத்துள்ளனர். முதலில் யோசித்த சில்க் ஸ்மிதா, பாதுகாப்பாய் அழைத்து சென்று அழைத்து வரவேண்டும் என கூறி சென்றுள்ளார்.

8 ஆயிரம் ரூபாய் பணம்
அதுவே அவரது முதல் வெளிநாட்டு பயணம் ஆகும். நிகழ்ச்சி நல்லப்படியாக நடந்து முடிந்து சென்னை திரும்பியுள்ளார் சில்க் ஸ்மிதா. அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பாலன்,
ஒரு நாட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் என 4 நாடுகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் என சில்க் ஸ்மிதாவுக்கு பேசப்பட்ட தொகையை கொடுத்துள்ளார்.

பணத்தை திருப்பிக்கொடுத்த சில்க்
ஆனால் அதனை திருப்பிக்கொடுத்த சில்க் ஸ்மிதா, இத்தனை நாடுகளுக்கு நான் சென்றதே இல்லை. அங்கு மக்கள் எனக்கு கொடுத்த அன்பும் பரிசு பொருட்களும் போதும் என கூறி தனக்கு வழங்கப்பட்ட தொகையை திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் அதனை வாங்க மறுத்துள்ளார் பாலன்.
நகையை அள்ளிக்கொடுத்த சில்க்
இதேபோல் ஒரு முறை தனது வீட்டு பணிப்பெண் தனது மகளுக்கு திருமணம் என கூற நடிகை சில்க் ஸ்மிதா பீரோவுக்குள் இருந்து கொத்தாக கை நிறைய நகைகளை அள்ளிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகை சில்க் ஸ்மிதா வெளியே தெரியாமல் பலருக்கும் பல உதவிகளை செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











