நேர் கொண்ட பார்வையில் வித்யா பாலன் என்ன அழகு... கதை எழுத ஆசைப்படும் வசந்தபாலன்
சென்னை: வித்யா பாலனை பார்த்துக்கொண்டே இருக்கலாம், அதோடு இன்னும் கூட சில காட்சிகளுக்கு மனம் ஏங்கியது என்று நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த இயக்குநர் வசந்த பாலன் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
நடிகர் அஜீத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பார்த்த பொதுமக்கள், திரைத்துறையினர், காவல் துறை அதிகாரிகள் என அனைத்து தரப்பினருமோ, படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். நடிகர் சூர்யா, அஜீத்குமாரின் நடிப்பை பாராட்டி கடிதம் எழுதி பொக்கே அனுப்பியிருந்தார்.

இயக்குநர் சுசீந்திரனும் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு, வரலாறு படம் போல் இந்தப் படமும் நிச்சயமாக வரலாறு படைக்கும் என்று பாராட்டியிருந்தார். அதேபோல், திருநெல்வேலி துணை காவல் ஆணையர் அர்ஜூன் சரவணனும் படத்தை பாராட்டி, இந்தக்காலத்திற்கு அவசியம் ஏற்ற படம் என்று சர்டிஃபிகேட் அளித்திருந்தார்.
இப்பொழுது இயக்குநர் வசந்தபாலனும் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அவர் எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.
பிங்க் திரைப்படம் வெளியான நாளிலிருந்து நான் செல்லும் திசையெங்கும் அதனைப் பற்றி பேசியிருக்கிறேன், புகழ்ந்திருக்கிறேன், ஒரு திரைப்படம் என்ன செய்யும், சமுதாயத்திற்கு என்ன செய்து விடமுடியும் என்ற சமூகத்தின் கேள்விகளுக்கு நோ என்ற பதிலை பெண்கள் சார்பாக திரைப்படம் சொல்லமுடியும் என்று ஆணித்தரமாக நிருபித்த திரைப்படம்.
டெல்லி மற்றும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு என்னைச் சுற்றியுள்ள சமூகம் பெண்கள் மீது தான் பழிச் சொற்களை வீசிய வண்ணம் இருந்தது. அதற்கு சரியான பதில் தான் நோ. இந்திய சமூகத்தின் பண்பாட்டு தளத்தின் மீது ஏறி உரக்க அதன் கறைகளை களைகிற ஒரு சொல்.
இந்த திரைப்படம் தமிழில், அதுவும் அஜீத்குமார் அவர்கள் நடிக்க தயாராகப்போகிறது என்ற செய்தியை அறிந்தேன். நல்ல முயற்சி தான் ஆனால் அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யும் என்கிற கேள்வி இருந்தது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் முன்னோட்டத்தில் சண்டைக்காட்சியை பார்த்த போது, இயக்குநர் விநோத் அவர்கள் இதை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்று அறிய ஆர்வமானேன். வேலைப்பளு காரணமாக நேற்றிரவு தான் படத்தைப் பார்த்தேன்.
வீட்டு உரிமையாளரை, அந்த பெண்களை தொந்தரவு செய்யும் பணபலமும், அதிகார பலமும் படைத்த கும்பல் வக்கீலையும் தொந்தரவு செய்யும் தானே, அப்படி தொந்தரவு செய்கையில் ஒரு சண்டைக்காட்சி வரும் தானே. அஜீத் அவர்களுக்காக செய்த திணிப்பின்றி மிகச் சரியாகப் பொருந்துகிறது. திரையில் ரசிகர்களின் விசில் பறக்கிறது.
பிங்க் படத்தை பலமுறை பார்த்த போதும் நமக்கு ஏன் இந்த இடம் தோணாமல் போனது. ரீமேக் ஆகிறது என்ற போதும் எல்லோரையும் போல நாமும் ஏன் சந்தேகக் கண்களுடன் பார்த்தோம் என்ற குற்ற உணர்ச்சியும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது.
வித்யா பாலன் எத்தனை அழகு, பார்த்து கொண்டேயிருக்கலாம் என்று தோன்றியது. இன்னும் சில காட்சிகளுக்கு மனம் ஏங்கியது. வித்யாபாலனுக்கு ஒரு கதை எழுதவேண்டும் என்று மனம் அடித்து கொண்டது, டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யாபாலனின் அபரிமிதமான நடிப்பை நான் வியந்து பின் தொடர்ந்திருக்கிறேன்.
என்ன அபாரமான நடிகை. மிக தாமதமாக தான் திரையுலகில் நுழைந்தார். காலம் இன்னும் இருக்கு என் கைகளில், பார்க்கலாம். தொடர்ந்து கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்த அஜீத் இது போன்ற படங்களிலும் நடிக்க முன்வருவது மிக ஆரோக்கியமானது, சிறப்பானது, பாராட்டுக்குரியது. இயக்குநர் விநோத் அவர்களுக்கு என் பாராட்டுகள்.


Click it and Unblock the Notifications











