ரியா சக்கரவர்த்தியை எப்படி வில்லியாக்கலாம்.. நெஞ்சம் உடைகிறது.. வித்யா பாலன் பரபரப்பு ட்வீட்!
மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நடிகை ரியா சக்கரவர்த்தியை எப்படி வில்லியாக்கலாம் என பிரபல நடிகை வித்யா பாலன் ட்வீட் போட்டிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
Recommended Video
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என்பது போல மீடியாக்கள் செயல்படுவதாகவும், உண்மை ஏதும் தெரியாமல் ரசிகர்கள் ரியாவை டார்கெட் செய்யக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலையா? தற்கொலையா?
பாலிவுட்டின் இளம் நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் அறிவித்து இருந்தனர். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது கொலையா? தற்கொலையா? என்பதை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

சிக்கி சின்னாபின்னமாகும் காதலி
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்கரவர்த்தி தான் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை கொன்று விட்டதாகவும், சுஷாந்தின் பணத்தை மோசடி செய்து திருடி உள்ளதாகவும், சுஷாந்தின் அப்பா கே.கே. சிங் பாட்னா போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், ரசிகர்கள், சில மீடியாக்கள் என நடிகை ரியா சக்கரவர்த்தி தொடர்ந்து டார்கெட் செய்து வருகின்றனர்.

சிபிஐ விசாரணை
சுமார் 34 மணி நேரத்துக்கும் மேலாக கடந்த 4 நாட்களில் நடிகை ரியா சக்கரவர்த்தியை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ரியா சக்கரவர்த்தியின் தம்பி செளவிக் சக்கரவர்த்தியிடமும் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், இன்று முதன்முறையாக ரியா சக்கரவர்த்தியின் பெற்றோர்களையும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

ரியாவுக்கு ஆதரவு
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாகவும், நடிகை ரியா சக்கரவர்த்தி டார்கெட் செய்யப்படுவது தொடர்பாகவும், எந்த முன்னணி நடிகர்களும், நடிகைகளும் வாயே திறக்காமல் மெளனம் காத்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பாக நடிகை டாப்ஸி, இந்த விவகாரத்தில், ரியா சக்கரவர்த்தியை டார்கெட் செய்வது தவறான விஷயம் என கூறி இருந்தார்.

பிரபலங்கள் ஆதரவு தர வேண்டும்
குற்றவாளியாக நடிகை ரியா சக்கரவர்த்தி உறுதி செய்யப்படாத நிலையில், அவரை குற்றவாளியை போல நடத்துவதும், மீடியாக்கள் அவரை இழிவாக பேசுவதும், சித்தரிப்பதும் தவறான விஷயம் என்றும், நடிகை ரியா சக்கரவர்த்திக்கு ஆதரவு கரம் நீட்ட மீடியா நண்பர்களே விழித்து எழுங்கள் என நடிகை லக்ஷ்மி மஞ்சு அதிரடியாக ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

நெஞ்சே வெடிக்கிறது
அவரது ட்வீட்டை பார்த்த நடிகை வித்யா பாலன், உண்மைதான். ரியா சக்கரவர்த்தியை மீடியா சர்க்கஸ்க்காக வில்லியாக மாற்றுவதை பார்த்து என் நெஞ்சே வெடிக்கிறது. இந்திய நீதித் துறையின் மீதும், விசாரணை செய்யும் அதிகாரிகள் மீதும் தனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அவர்கள் நிச்சயம் சுஷாந்த் மரணம் தொடர்பான உண்மையை கண்டறிவார்கள், அதற்குள் நீங்களே தீர்ப்பு எழுதி விடாதீர்கள் என கொதித்தெழுந்து ட்வீட் போட்டிருக்கிறார் சகுந்தலா தேவி நடிகை.

வித்யா பாலனையும் விடல
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை திசை திருப்பும் முயற்சியில் சில பாலிவுட் நடிகைகளை பாலிவுட் மாஃபியாக்கள் களமிறக்கி உள்ளனர் என்றும், பாலிவுட்டில் நிலவி வரும் போதைப் பொருள் புழக்கத்தின் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் தான் வித்யா பாலனின் நெஞ்சே வெடிக்கிறது என ட்வீட் போட்டுள்ளார் என்றும், அவரது படங்களையும் இனி புறக்கணிப்போம் என "Vidya Balan" ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











