S.J.Suryah - அவர் ஒரு பைத்தியம்.. எஸ்.ஜே.சூர்யா பற்றி விக்னேஷ் சிவன் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் எல்ஐசி என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதில் பிரதீப் ஆண்டனி, எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்கத்துக்கு தற்போது ஓய்வு கொடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் படுபிஸியாக இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படத்திலேயே சிம்புவை ஹீரோவாக கமிட்டாக்கி கவனம் ஈர்த்தார். அதேபோல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நடிகை ஷோபனா என பெரிய ஸ்டார் வேல்யூவுடன் படம் உருவானது. ஸ்டார் வேல்யூ மட்டுமின்றி கதை ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நானும் ரௌடிதான்: 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.
நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களது பெயர்களை சமீபத்தில்தான் நயன்தாரா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
காத்து வாக்குல ரெண்டு காதல்: இதற்கிடையே இருவரது திருமணம் நடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், விக்னேஷ் சிவன் மேக்கிங் சுத்தமாக எடுபடவில்லை என்றும் ரசிகர்களில் ஒரு தரப்பினர் வெளிப்படையாகவே கூறினர். இதனையடுத்து அஜித்தை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்திலிருந்து விக்கி வெளியேறினார்.
எல்ஐசி: இந்தச் சூழலில் எல்ஐசி என்ற படத்தை தற்போது அவர் இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
விக்னேஷ் சிவன் புகழாரம்: இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் எஸ்.ஜே.சூர்யா பற்றி பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. சூர்யா குறித்து அவர் பேசுகையில், "எஸ்.ஜே.சூர்யா ஒரு நடிப்பு பைத்தியம். எனது திரையுலக வாழ்க்கையில் இப்படி ஒரு அர்ப்பணிப்பு இருக்கும் நடிகரை நான் பார்த்ததே இல்லை. அவருக்கு இருக்கிற திறமை மற்றும் அனுபவத்திற்கு இன்னும் மிக உயரத்துக்கு அவர் செல்ல வேண்டியவர். கண்டிப்பாக அவருடைய கனவைவிட பல மடங்கு அவர் சாதிப்பார்.. வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "விக்னேஷ் சிவன் இந்த அன்புக்கு நன்றி. எல்ஐசி படத்தில் எனது முதல் நாள் ஷூட்டிங்கை என்ஜாய் செய்தேன். படப்பிடிப்பின்போது எனது நடிப்பில் நீங்கள் கேட்டுக்கொண்ட நுணுக்கங்களை ரொம்பவே ரசித்தேன். அடுத்தடுத்த ஷெட்யூலுக்காக நான் காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











