LIC டைட்டில் என்னுடையது.. விக்னேஷ் சிவன் மேனேஜர் செய்த மோசம்.. இயக்குநர் ஆதங்கம்!
சென்னை: செவன் ஸ்கிரீன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் LIC படத்தின் தலைப்பு என்னுடையது என்று இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், கீர்த்தி செட்டி, எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு உட்பட பலரும் கமிட்டாகி உள்ளனர்.

படத்தின் பூஜை கடந்த வாரம் போடப்பட்ட நிலையில், முதற்கட்டமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.
பல கோடி நஷ்டம்: இந்நிலையில், இயக்குநர் எஸ் எஸ் குமார், எல்ஐசி படத்தின் தலைப்பு என்னுடையது என்று உரிமைகோரி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்,, சினிமா எடுப்பது கஷ்டம், காப்பாற்றுவது கஷ்டம் என்பார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில் டைட்டிலை காப்பாற்றுவதே கஷ்டம் என்ற நிலை வந்துள்ளது.
சினிமாவில் நான் பல படத்திற்கு இசையமைத்து இருக்கிறேன், தயாரித்து இருக்கிறேன், இயக்கியும் இருக்கிறேன். இதனால், எனக்கு பப்ளிசிட்டி தேவையில்லை. நான் 2012ம் ஆண்டு சேரன் நாட்டின் பெண்களுடனே என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்தேன், அந்த படத்தின் தலைப்பு ரொம்ப ஆபாசமா இருக்கு என்று படத்தை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை. படம் எதிர்பார்த்தபடி வெளியாகாததால் எனக்கு 12 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதை ஒரு பாடமாக வைத்துக்கொணடு படத்தின் தலைப்பை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறேன்.

ஹீரோ டைட்டில் என்னுடையதுதான்: அப்படித்தான் இந்த படத்திற்கு ஹீரோ என்று பெயர் வைத்தேன். ஆனால், சிவகார்த்திகேயன் படத்திற்கு அந்த டைட்டில் வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டதால், நான் கொடுத்து விட்டேன். அதையடுத்து, அந்த படத்திற்கு, எல்ஜிசி என பெயர் வைத்து 10 ஆண்டுக்கும் மேலாக அதை புதுப்பித்து பாதுகாத்து வருகிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளேன்.
எல்ஐசி என் டைட்டில்: இதையடுத்து நான்கு மாதத்திற்கு முன்பு விக்னேஷ் சிவன் மேனேஜர் எனக்கு கால் பண்ணி, இது எங்க படத்தின் தலைப்பு என்றார். உடனே நான் பல ஆண்டுகளாக இந்த டைட்டிலை பதிவு செய்து புதுப்பித்து வருகிறேன். இதனால், படத்தின் தலைப்பை தரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். பிறகு இரண்டு மாதம் கழித்து போன் செய்தார். அப்போதும் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

என்னிடம் ஆதரரம் இருக்கு: தற்போது விக்னேஷ் சிவன் தனது படத்திற்கு எல்ஐசி என பெயர்வைத்து பூஜை போட்டுள்ளார். இதைப்பார்த்துவிட்டு எனக்கு பெரிய அதிர்ச்சி. படத்தின் தலைப்பு என்னிடம் இருக்கும் போது, அந்த தலைப்பை அவர் எப்படி வைக்க முடியும். நான்கு பேர் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறோம்,தற்போது உருவாகி இருக்கும் இந்த பிரச்சனையால் அவர்கள் அனைவரும் பின்வாங்குகிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்து இருக்கிறேன், என்னிடம் படத்தின் தலைப்புக்கான அனைத்து ஆதரரங்களும் உள்ளது. மேலும், இந்த பிரச்சனையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று இயக்குநர் எஸ்.எஸ்.குமார் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











