விஜயகாந்த் டெபாசிட் வாங்கி விடக் கூடாது-மக்களுக்கு வடிவேலு கோரிக்கை

By Sudha

ரிஷிவந்தியம்: விஜயகாந்த் டெபாசிட் வாங்கி விடாத அளவுக்கு மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ரிஷிவந்தியத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் வடிவேலு கோரிக்கை விடுத்தார்.

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்து விஜயகாந்த்தை கடுமையாக திட்டித் தீர்த்த, கிண்டலடித்த, நக்கலடித்த நடிகர் வடிவேலு நேற்று விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் தனது பிரசாரத்தை முடித்தார்.

ஜி.அரியூர் என்ற கிராமத்தில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார். கிட்டத்தட்ட 12 இடங்களில் பிரசாரம் செய்த வடிவேலு இறுதியாக அரியூரில் பேசியபோது,

என்னால் திரைப்படங்கள் மூலமாகத்தான் உங்களையும், குழந்தைகளையும் சிரிக்க வைக்க முடியும். ஆனால், உங்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க முடியாது. அவற்றை செய்து கொடுக்கக் கூடியவர் முதல்வர் கருணாநிதிதான். ஐந்தாண்டுகளில் முதல்வர் கருணாநிதி பல நல்ல திட்டங்களை செய்துள்ளார். கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகியோரது ஆசியோடு மதுரையில் பிரசாரத்தை தொடங்கி, ரிஷிவந்தியம் தொகுதியில் முடிக்கிறேன்.

கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருகிறார். அந்த அரிசியை உலை வைப்பதற்காக கேஸ் அடுப்பும் கொடுக்கிறார். அது கொதிக்கின்ற நேரம் வரை உலகத்தை பார்க்க டிவியையும் கொடுத்துள்ளார். ஏழை மாணவர்கள் படிப்பதற்காக சமச்சீர் கல்வி கொண்டு வந்துள்ளார். வாரம் 5 முட்டை வழங்குகிறார். மாணவர்களுக்கு 3 சீருடைகளையும் வழங்குகிறார்.

பெண்களுக்கு திருமணம் உதவி தொகையாக ரூ.25,000 கொடுத்தார். இப்போது ரூ.30,000 கொடுக்கப்போகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6,000 கொடுத்து வருகிறார். இப்போது ரூ.10 ஆயிரமாக கொடுக்க போகிறார். முதியோருக்கு ரூ.500 கொடுத்து, இப்போது ரூ.750 கொடுக்க போகிறார். 58 வயது கடந்த முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க உள்ளார். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார். வேறு ஆட்சி மாறினால். இந்த திட்டங்கள் எல்லாம் போய்விடும்.

எங்கள் வீட்டில் 7 பிள்ளைகள். குடும்ப கஷ்டம் காரணமாக 4 தம்பிகளுடன் கண்ணாடி கடையில் வேலை செய்தேன். ரூ.60 சம்பளத்தில் 15 பேரை காப்பாற்ற வேண்டும். ஏழையின் கஷ்டம், அவர்களது வலி எனக்கு நன்றாக தெரியும் (இதைக் கூறும்போது வடிவேலு அழுதுவிட்டார்). மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த என் தந்தையை வறுமையின் காரணமாக காப்பாற்ற முடியாமல் போனது (அப்போது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினார் வடிவேலு).
இப்போது உள்ளது போல் கலைஞர் காப்பீட்டு திட்டம் அப்போது இருந்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருப்போம்.

நான் சென்ற இடங்களில் எல்லாம் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்க கூடாது என்ற எண்ணத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் தொடங்கி பல்வேறு இடங்களில் வீடுகளை கட்டி கொடுத்துள்ளார். இந்த சாதனை திட்டங்கள்போல் வருகிற தேர்தலில் வெற்றி பெற்றால் மிக்சி, கிரைண்டர் மக்களுக்கு வழங்கப்படும் என்பது போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் விருத்தாசலத்தில் மக்களிடத்தில் பொய் சொல்லி, அவர்களை ஏமாற்றிவிட்டு ரிஷிவந்தியம் வந்துள்ளார். இங்கு யாரையும் ஏமாற்ற முடியாது. விருத்தாசலத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று சொன்னவர் அவ்வாறு செய்யவில்லை. சினிமாவில் அவர் தர்மம் செய்வது போன்ற காட்சியை பார்த்து மக்கள் ஏமாந்துவிட்டனர்.

முதல்வர் கருணாநிதி அறிவி்த்துள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டுமானால் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜை, அவரை எதிர்த்துப் போட்டியிடும் விஜயகாந்த் டெபாசிட் வாங்காத அளவிற்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு உழத் தெரியும். வியாபாரிகளுக்கு வியாபாரம் தெரியும். மன்னனுக்கு ஆளத் தெரியும். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு என்ன தெரியும்?

நான் சினிமாவில் காமெடி செய்கிறேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார். நகைச்சுவையும் இசையும் நம் ரத்தத்தோடு கலந்த ஒன்றாகும். இப்போது கருணாநிதியின் நலத்திட்டங்களும் நம் ரத்தத்தோடு கலந்துவிட்டது.

கூட்டணி என்பது ஒரு கூட்டுப் பிரார்த்தனை போன்றது. ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் விஜயகாந்த்தும் ஒரே மேடையில் இதுவரையில் பேசவில்லை. இவர்களுக்குள் தொகுதி உடன்பாடு இருந்தால் மட்டும் போதாது,
மனசு உடன்பாடு இருக்க வேண்டும்.

அதிமுக கூட்டணி எண்ணையும், தண்ணியும் கலந்தது போல உள்ளது. இரண்டும் ஒன்று சேரவே சேராது. அதை செய்வேன், இதை செய்வேன் என்று கூறும் விஜயகாந்த வெற்றிபெற்றாலும் அந்த அம்மாவிடம் ஒன்றும் கேட்க முடியாது. ஏனென்றால் அந்த அம்மாவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தியும், செருப்பால் அடித்தும் விஜயகாந்த அவமானப்படுத்தியுள்ளார்.

இதை அந்த அம்மா மறக்கமாட்டார். விஜயகாந்தால் அதிமுக கூட்டணி கெட்டுப்போச்சு. அவருக்கு ஒரு ஓட்டுகூட போடாதீங்க. உடல்நிலையை காரணம் காட்டி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அனுதாபம் மூலம் ஓட்டுக்களை பெற விஜயகாந்த் முயற்சிக்கிறார். அவருடைய டெபாசிட்டை காலி செய்யுங்கள். என்னை பயமுறுத்த பார்க்கிறார்கள். என் மக்களை ஏமாற விடமாட்டேன். எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவது மிகப்பெரிய தப்பு. விஜயகாந்தை பார்த்தாலே குழந்தைகள்கூட அழுகிறது. நான் சினிமாவில் காமெடி செய்தேன். விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார். யாரும் ஏமாந்து விடாதீர்கள்.

நான் எப்படி சிரிக்க வைத்தாலும் உங்களுடைய அடிப்படை வசதிகளை என்னால் நிறைவேற்ற முடியாது. அதை தமிழக அரசுதான் செய்ய வேண்டும்.

எனவே கலைஞர் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்ந்திட, சினிமா காட்சியை காட்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் தேமுதிகவை தோற்கடிக்க, காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.சிவராஜுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார் வடிவேலு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X