100 கோடி, 200 கோடி சம்பளம்.. தெலுங்கு தயாரிப்பாளர்களை விஜய், அஜித் தேடி ஓட இதுதான் காரணமா?
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படங்களை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அடுத்து தெலுங்கு தயாரிப்பாளர்களை வாழ வைக்க முயற்சி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்தின் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினிகாந்தின் லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்களையும் லைகா நிறுவனம் பெரும் பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது.

100 கோடி, 200 கோடி சம்பளம்: ரஜினிகாந்த், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் 100 கோடி முதல் 200 கோடி ரூபாய் வரை தங்களது சம்பளத்தை உயர்த்தி விட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரண தயாரிப்பாளர்களால் டாப் நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை தர முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களான லைகா உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தான் தற்போது முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகின்றன. ஏவிஎம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பு பணிகளையே நிறுத்தி விட்டன.
நடிகர் விஜய் கோட் படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார் என்றும் விடாமுயற்சி படத்துக்காக அஜித்துக்கு 105 கோடி சம்பளம் என்றும் அடுத்த படத்தில் 160 கோடியாக சம்பளத்தை உயர்த்தப் போகிறார் என்றும் வேட்டையன் படத்திற்கு ரஜினிகாந்த் 160 கோடி வாங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள்: அஜித் மற்றும் விஜய் அடுத்தடுத்த படங்களுக்கு மேலும் அதிக சம்பளம் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கால் ஷீட் தர தயாராக இருப்பதாக கூறுகின்றனர். அதன் விளைவாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது தமிழ் சினிமாவுக்கு படையெடுத்து வரவுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி 69: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்து நடிகர் விஜய் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தளபதி 69-வது படத்தை தயாரிக்கப் போவதாகவும் இயக்குநர் விரைவில் செய்யப்படுவார் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏகே 63: அதேபோல நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 63 படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் படத்தை மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்க உள்ளார் என்றும் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க உள்ளார் என்றும் கூறுகின்றனர். முன்னணி நடிகர்கள் அதிக சம்பளத்தை கேட்பதால் தான் தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் கோலிவுட்டுக்குள் நுழைய உள்ளது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











