Vijay Antony - மகள் இறப்பு.. விஜய் ஆண்டனி ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்கவில்லை.. தயாரிப்பாளர் உருக்கம்
சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) தனது மகள் இறந்ததை அடுத்து விஜய் ஆண்டனி ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்திருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கியிருந்த அவர் கடைசியாக கொலை படத்தில் நடித்திருந்தார். விஜய் ஆண்டனியின் இசைக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் நடிப்புக்கும் இருக்கிறார்கள்.

மகள் மீரா: விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள் இருந்தார்கள். அவர்களில் மீரா 12ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க நேற்று முன் தினம் காலை மீரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை விஜய் ஆண்டனியை உடைந்து போக செய்திருக்கிறது.
உடல் நல்லடக்கம்: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மீராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு டிடிகே சாலையில் இருக்கும் விஜய் ஆண்டனி வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள் முதல் பொதுமக்கள்வரை அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தி விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் கூறிய அவர்கள் என்னதான் ஆறுதல் சொன்னாலும் மகளை இழந்த அவர் எதை கொண்டு இனி தேறி வருவார் என்று சோகத்துடன் கூறவும் செய்தனர்.
மீராவின் உடல் நேற்று காலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது விஜய் ஆண்டனியும் அவரது மனைவி பாத்திமாவும் உடைந்து அழுதனர்.மேலும் மீராவின் சவப்பெட்டியை புதைக்கும்போது பாத்திமா ஏதாவது பிரச்னை இருந்திருந்தால் என்னிடமாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே என்று கதறியதாக கூறப்படுகிறது. விஜய் ஆண்டனியையும் பாத்திமாவையும் அந்த நிலைமையில் பார்த்தவர்களும் கலங்கிபோய் நின்றனர்.
இதற்கிடையே மீரா மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் அவர் அவ்வளவு தைரியமான பெண். அதேபோல் தனது அருகில் யாராவது மன உளைச்சலில் இருந்தால் அவர்களிடம் பேசி சரி செய்துவிடக்கூடியவர் என்று மீராவின் தோழிகளின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் விஜய் ஆண்டனி குறித்தும் மீராவின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு கீழே ரசிகர் ஒருவர், 'சார் விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார்' என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், 'பல மணி நேரமாக ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்கவில்லை. அவர் இப்படி கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை' என குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











