ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு பிரதர்.. விஜய் ஆண்டனி மகள் தற்கொலை.. கெளதம் கார்த்திக் வேதனை
சென்னை: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களையும் திரையுலகினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
12வது படித்து வந்த விஜய் ஆண்டனி மகள் மீரா திடீரென இப்படியொரு முடிவை ஏன் எடுத்தார் என்கிற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். மன அழுத்தம் தான் காரணம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நடிகர் கவுதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டுள்ளார்.
கெளதம் கார்த்திக் இரங்கல்: காலையிலேயே இப்படியொரு துயரமான செய்தியை அறிந்ததும் ரொம்பவே ஷாக் ஆகிவிட்டேன். பிரதர் விஜய் ஆண்டனிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். கடவுள் இத்தனை பெரிய துயரில் இருந்து மீண்டு வர விஜய் ஆண்டனிக்கும் அவரது குடும்பத்துக்கும் சக்தியை கொடுக்க வேண்டும் என நடிகர் கெளதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் இரங்கல்: விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை அவரது இல்லத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த சினிமா பிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனிக்கு போன் செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
மாணவர்களிடையே மன அழுத்தம்: இளம் வயதில் மாணவர்களிடையே அதிக மன அழுத்தத்தை பள்ளிகளும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் அதிகளவில் கொடுத்து வருவதால் தான் மனவேதனைக்கு குழந்தைகள் ஆளாகின்றனர் என்றும் பல இடங்களில் இது போல இளம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருவது சமீப காலங்களில் சோகமான சூழலை உருவாக்கி வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் கொடுக்க வேண்டும் என்றும் மார்க்கை விட குழந்தைகளின் உயிர் தான் முக்கியம் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











