மழை பிடிக்காத மனிதன்: ராகுகாலமா? ஏமகண்டமா? விஜய் ஆண்டனி மாஸ் பேச்சு!
சென்னை: விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய் ஆண்டனி சினிமாவில் சென்டிமெண்ட் இல்ல, ராகுகாலமா, ஏமகண்டமா எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் என்றார். இந்த விழாவில், இயக்குநர் விஜய் மில்டன், தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
கோலி சோடா படத்தை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விஜய் மில்டன். கோலி சோடா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு 'கோலி சோடா 2' படத்தை வெளியிட்டார். இரண்டாம் பாகமும் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதன்பிறகு விஜய் மில்டன் எந்த தமிழ் படத்தையும் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அச்சு ராஜாமணி - விஜய் ஆண்டனி இணைந்து இசையமைத்துள்ளனர்.

டிரைலர் எப்படி: இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதில், இளையராஜாவின் 'உறவுகள் தொடர்கதை' பாடலுடன் தொடங்குகிறது ட்ரெய்லர்."யாரைப் பத்தி, யாருக்கு தான் முழுசா தெரியும். ஒருத்தர பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கிற முயற்சியில தானே இந்த உலகமே உருண்டுகிட்டு இருக்கு"என சரண்யா பொன்வண்ணன் பேசும் வசனம் கவனம் பெறுகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனி, தன்னைச் சுற்றியிருப்பவர்களின் பிரச்சினையில் தலையிடுவதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளாகவும் படம் இருக்கும் என தெரிகிறது. இப்படம் ஜூலையில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி பதில்: டிரைலர் வெளியீட்டுக்கு பின் செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஒரு செய்தியாளர், விஜய் ஆண்டனி தீக்காய மேக்கப்புடன் நிகழ்ச்சிக்கு வந்தது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர், நான் மேக்கப்புடன் வந்தது எல்லாம் சாதாரணமான விஷயம் தான். நான் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்தேன், அங்கு ஷாட் முடிய கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இந்த விழாவிற்கும் நேரமாகிவிட்டது. மேக்கப்பை நீக்க ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், மேக்கப்போடு வந்துவிட்டேன். சொன்னா சொன்ன நேரத்திற்கு அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது என் பழக்கம் என்றார்.
ராகு காலமா.. எமகண்டமா?: இதைத்தொடர்ந்து மற்றொரு செய்தியாளர் சினிமாவில் நெகட்டிவ் டைட்டில் வைக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால், நீங்கள் சைத்தான், எமன் என தொடர்ந்து அதுபோலத்தான் டைட்டில் வைக்கிறீர்கள். அண்மையில் உங்களுக்கு விபத்து நடந்தது. இதனால், இனிமேல் நெகட்டிவ் டைட்டில் வைப்பீங்களா என கேட்டார். இதற்கு பதில் அளித்த இவர், சினிமாவில் செட்டிசெண்ட் இல்ல சார், ராகுகாலத்தில் கூட படம் எடுத்து எமகண்டத்தில் ரிலீஸ் செய்யலாம். எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் என்றார்.


Click it and Unblock the Notifications











