Vijay Antony - செருப்பு அணிய மறுக்கும் விஜய் ஆண்டனி.. என்ன காரணம் தெரியுமா?.. அவரே சொன்ன பதில்
சென்னை: விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். இசையமைப்பாளராக மட்டும் வலம் வந்துகொண்டிருந்த அவர் நான் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர் தற்போது ஹிட்லர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதன் பத்திரிகையாளர் சந்த்ப்பு சமீபத்தில் நடைபெற்றது.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி. இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம்.

குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாக்க முக்க' பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. அந்தப் பாடலின் ஹிட்டுக்கு பிறகு முன்னணி இசையமைப்பாளராக மாறிய விஜய் ஆண்டனி விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தார்.
ஹீரோவான விஜய் ஆண்டனி: இந்தச் சூழலில் விஜய் ஆண்டனி 'நான்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் நடித்த 'சலீம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் கதையும், அவரது நடிப்பும் படத்தை பெரும் ஹிட்டாக்கின.
இயக்குநரான விஜய் ஆண்டனி: பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்படத்தின் ஷூட்டிங்போதுதான் விஜய் ஆண்டனி விபத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீள முடியாத துயரம்: ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்ட அவருக்கு மீள முடியாத துயரமாக அமைந்தது அவரது மகள் மீராவின் மரணம். ஏதோ காரணத்தால் சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் காரணமாக விஜய் ஆண்டனி உடைந்தே போய்விட்டார். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஹிட்லர் படத்தில் நடித்திருக்கிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் கொலை படம் வெளியானது.
செருப்பு அணியாதது ஏன்?: இதற்கிடையே கடந்த சில காலமாகவே விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருக்கிறார். இந்த சூழலில் ஹிட்லர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது அவரிடம் செருப்பு அணியாததற்கு காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "குறிப்பிட்ட எந்தக் காரணமும் இல்லை. செருப்பு அணிய தோன்றவில்லை. செருப்பு அணிய வேண்டும் என்று தோன்றினால் மீண்டும் அணிந்துவிடுவேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











