ஷூட்டிங் ஸ்பாட்டில் அஞ்சலி.. எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு விஜய் ஆண்டனி இறுதி மரியாதை!
சென்னை: தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாகி உள்ள விஜய் ஆண்டனி, ஷூட்டிங் ஸ்பாட்டில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு படக்குழுவினர் உடன் அஞ்சலி செலுத்தினார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ஆண்டனி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

இசை அஞ்சலி
பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், ஜி.வி. பிரகாஷ், இமான், வித்யாசாகர், தேவி ஸ்ரீ பிரசாத், தமன் உள்ளிட்ட பலர் இசை அஞ்சலி செலுத்திய நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது இறுதி மரியாதை செலுத்தி உள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில்
மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி தனது படக்குழுவினருடன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து தனது இறுதி மரியாதையை செலுத்தினார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன.

ஆத்மிகாவுடன்
அக்னிச் சிறகுகள், தமிழரசன், காக்கி என ஏகப்பட்ட படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கும் விஜய் ஆண்டனி தனது நடிப்பில் உருவாகி வரும் 14வது படத்தில் நடிகை ஆத்மிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்ட இந்த படம் லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது.

குறைந்த எண்ணிக்கையில்
மெட்ரோ படத்தை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தற்போது மிகுந்த பாதுகாப்புடன் குறைந்த அளவிலான ஆட்களுடன் அரசின் பரிந்துரைகளை பின்பற்றி ஷூட் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விஜய் ஆண்டனி நடித்த படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











