வலியும், வேதனையும் தெரியும்.. சிவகார்த்திகேயன் படத்துக்கு விட்டுக்கொடுக்க காரணம் சொன்ன விஜய் ஆண்டனி
சென்னை: சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி; தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவர். கடந்த சில வருடங்களாகவே ஹீரோவாக நடித்துவருகிறார் அவர். இந்தச் சூழலில் அவர் இப்போது மார்கன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நேற்று படக்குழுவினர் சென்னையில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது பராசக்தி டைட்டில் பிரச்னை குறித்து பேசினார்.
விஜய்யின் தந்தை இயக்கிய சுக்ரன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மெலோடி, ஃபோக் என எந்த ஜானராக இருந்தாலும் அதில் தனது முத்திரையை பதித்துவிடும் அவர் நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடிக்க; அதே உற்சாகத்துடன் தொடர்ந்து ஹீரோவாகவே பயணிக்க ஆரம்பித்தார்.
பெரிய ஹிட் இல்லை: அவர் தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்தாலும் பிச்சைக்காரன், சலீம் உள்ளிட்ட படங்களை தவிர்த்து மற்ற திரைப்படங்கள் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டை கொடுக்கவில்லை. மேலும் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகத்தை அவரே இயக்கவும் செய்தார். அதுவும் தோல்வியைத்தான் சந்தித்தது. அதுமட்டுமின்றி அப்படத்தின் ஷூட்டிங்கில்தான் பெரிய விபத்தை அவர் சந்தித்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
மார்கன்: சூழல் இப்படி இருக்க அவர் இப்போது மார்கன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அந்தப் படக்குழு நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது பராசக்தி பட டைட்டில் குறித்து பேசிய அவர், "பட டைட்டில் பிரச்னையை பொறுத்தவரை எனக்கு ஒருமுறைதான் நடந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்துக்குத்தான் நடந்தது. அது தெரியாமல் நடந்த ஒரு விஷயம்தான். அந்த டைட்டிலை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை.

நானே விட்டுக்கொடுத்துவிட்டேன்: திரைத்துறையில் டைட்டில்களை பதிவு செய்வதற்கு இரண்டு, மூன்று யூனியன்கள் இருக்கின்றன. இந்த விஷயம் எதார்த்தமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். அவர்கள் தரப்பில் அந்த டைட்டிலை அறிவித்துவிட்டார்கள். அது மக்கள் மனதிலும் பதிந்துவிட்டது. அதனால்தான் நானே அந்த டைட்டிலை அவர்களுக்காக விட்டுக்கொடுத்துவிட்டேன். நட்பு ரீதியாகத்தான் அதை நான் செய்தேன். எனக்கு ஒரு தயாரிப்பாளரின் வலியும் வேதனையும் நன்றாகவே தெரியும். இதுபோன்ற டைட்டில் பிரச்னைகள் வருவது இயல்பான ஒன்றுதான். வாகனத்தை ஓட்டி செல்கிறோம் என்றால் விபத்து எதிர்பாராத விதமாகத்தான் நடக்கும். திட்டமிட்டு அதனை யாரும் செய்யமாட்டார்கள். நான் அப்படித்தான் இதை பார்க்கிறேன்" என்றார்.
பராசக்தி பிரச்னை: முன்னதாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் சிவகார்த்திகேயன். முதலில் அந்தப் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். அதற்கு பிறகு எஸ்கே, ரவி மோகன் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்தார்கள். படத்துக்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் விஜய் ஆண்டனி தனது 25ஆவது படமாக சக்தி திருமகன் என்ற படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. எனவே விஜய் ஆண்டனி அந்த சமயத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்திருந்த பராசக்தி படத்தை தயாரித்திருந்த தயாரிப்பு நிறுவனமோ, அந்த டைட்டிலை யாருக்கும் நாங்கள் கொடுப்பதாக இல்லை என தெரிவித்திருந்தது. இந்த விஷயம் பெரிய சர்ச்சையையும், வாக்குவாதத்தையும் கிளப்பியது. ஆனால் ஒருகட்டத்தில் அந்தப் பிரச்னை காணாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











