Vijay Antony: ”என் மகள் மீரா மிக அன்பானவள்... அவளுடன் நானும் இறந்துவிட்டேன்”: விஜய் ஆண்டனி உருக்கம்
சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இருதினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.
மீராவின் தற்கொலை செய்தி, திரை பிரபலங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மீராவின் உடலுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தனது மகள் மீராவின் உயிரிழப்பு குறித்து, விஜய் ஆண்டனி உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மகளுடன் நானும் இறந்துவிட்டேன்: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவின் முக்கியமான துறைகளிலும் தடம் பதித்து வருகிறார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2ம் பாகம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இருதினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்த மீரா, கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டார். மீராவின் தற்கொலை சம்பவம் திரையுலகைச் சேர்ந்தவர்களை மட்டுமின்றி, ரசிகர்கள், பொதுமக்கள் என பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
இதனையடுத்து நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என திரைத்துறையைச் சேர்ந்த பலரும், மீராவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதேநேரம் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில், மகள் மீராவின் மறைவு குறித்து விஜய் ஆண்டனி உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள்."
"அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த அறிக்கை பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











