காசு வாங்கிட்டு ரிவ்யூ பண்றாங்க.. சினிமாவை கொல்லாதீங்க.. சுசீந்திரன் அதிரடி பேச்சு!
சென்னை: விஜய் ஆண்டனி நடித்து கடந்த 27ஆம் தேதி தியேட்டரில் வெளியான திரைப்படம் மார்கன். இப்படத்தில், விஜய் ஆண்டனியுடன் சமுத்திரக்கனி, பிரிகிதா, ஈஃகாத்மிகா உமாபதி, விஜய் ஆண்டனியின் தங்கை மகன் அஜய் திசன், வினோத் சாகர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகி உள்ள இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். மார்கன் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய, இயக்குநர் சுசீந்திரன், விஜய் ஆண்டனியை எப்போதுமே லியோ ஜான் பால் பற்றி பல முறை சொல்லி இருக்கிறார். ஆனால், இன்று தான் அவரை நான் நேரில் சந்திக்கிறேன். படம் வெளியான அன்று நான் திருவண்ணாமலையில் இருந்ததால் என்னால் படத்தை பார்க்க முடியவில்லை. அன்று இரவே படத்தை பார்த்தேன். இந்த படத்தை பலரும் குடும்பத்துடன் வந்து பார்த்தார்கள். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் யார் இந்த கொலையை செய்திருப்பார்... என படம் பார்த்த ஒவ்வொரு வரும், ஒவ்வொரு கோணத்தில் யோசிக்க தொடங்கி விட்டார். இதுதான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். திரைக்கதை, சிஜி ஒர்க், இசை என அனைத்தையும் பார்க்கும் போது, ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படமாக இந்த படம் இருந்தது.
குறையே இல்லை: நான் இயக்குனராக இருப்பதால் படம் பார்த்த பிறகு சில, லாஜிக் மீறல்கள், சில குறைகள் எல்லாம் கண்ணுக்கு தென்படும். ஆனால், இந்த படத்தை பார்த்த பிறகு அப்படி எந்த குறையும் எனக்கு தென்படவில்லை. ஒரு புது இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்து இருக்கும் லியோ ஜான் பால் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய சுசீந்திரன், டி.என்.ஏ, மார்கன் படங்களுக்கு ஆரம்பத்தில் நல்ல விமர்சனம் வரவில்லை. ஆனால், தியேட்டரில் சென்று நான் படத்தை பார்த்தபோது படம் நன்றாக இருக்கிறது. பிறகு ஏன் நல்ல விமர்சனம் வரவில்லை என யோசித்தேன்.

காசு வாங்கிக்கொண்டு விமர்சனம்: இப்போது சில யூடியூபர்கள் விளம்பர வருமானத்திற்காக தவறான விமர்சனம் கொடுக்கிறார்கள். சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை கொலை செய்கிறார்கள். இப்போது ஏகப்பட்ட டீம் வந்துவிட்டது, ஒரு டீம்.. சார் படத்துக்கு நாமே டிக்கெட் கொடுத்து 100 பேரை அனுப்புவோம், அவங்க வெளியே வரும் போது படம் ஆஹா... ஓஹோ.. என சொல்லுவார்கள் என ஐடியா கொடுக்கிறார்கள். மற்றொரு டீம், தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிட்டு படத்தைப் பற்றி மாற்றி தவறாக சொல்ல சொல்கிறார்கள். மக்கள் தான் எந்த படத்தை பார்க்க வேண்டும், அந்த படத்தை பார்க்கக்கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டும். மக்களின் பார்வையை நாம் மாற்ற வேண்டும்.
இப்போது, யூடியூபில் வரும் விமர்சனங்கள் மீது தமிழ் சினிமாவில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. விமர்சனம் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வழக்கு தொடுத்தது. ஆனால், நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இதனால், போலியாக ஒரு படத்தைப் பற்றி புகழ்வதை தடுக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம் என இயக்குநர் சுசீந்திரன் அந்த விழாவில் பேசினார்.


Click it and Unblock the Notifications











