Vijay Antony Daughter - கண்ணீருக்கு மகள் ஆறுதல்.. தங்கக்கட்டி செல்லக்குட்டி.. விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்
சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) தனது கண்ணீருக்கு தன் மகள் ஆறுதல் என்று விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா பதிவிட்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். இசை மீது உள்ள ஆர்வத்தால் ஒருகட்டத்தில் தானாகவே ட்யூன் போட்டு பழகி பிறகு பயிற்சிகளை எடுத்து முறையாக இசையமைக்க கற்றுக்கொண்டார். தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்துகொண்டிருந்தவர்க்கு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது.

கவனம் ஈர்த்த விஜய் ஆண்டனி: சுக்ரன் படத்தின் பாடல்கள் ஹிட்டடிக்க அடுத்ததாக டிஷ்யூம் படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற டைலாமோ டைலாமோ, பூமிக்கு வெளிச்சமெல்லாம், நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என மொத்தம் ஐந்து பாடல்களும் ஆல்பம் ஹிட்டடித்தன. குறிப்பாக ஒரே படத்தில் பல ஜானர்களில் பாடல்கள் கொடுத்து அசத்தினார்.
முன்னணி இசையமைப்பாளர்: அந்தப் படத்திலிருந்து விஜய் ஆண்டனிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. தொடர்ந்து வித்தியாச வித்தியாசமாக பாடல்களை கொடுக்க ஆரம்பித்தார். குறிப்பாக ஆத்திச்சூடி பாடல் ராப் ரகத்தில் கொடுத்து அசத்தினார். அதனையடுத்து காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்க முக்க பாடல் அவரை உச்சத்தில் நிறுத்தியது.
அதனையடுத்து விஜய்யின் வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார். தொடர்ந்து நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் கடைசியாக பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்திருந்தார்.
விஜய் ஆண்டனி மகள்: விஜய் ஆண்டனிக்கு பாத்திமா என்ற மனைவியும், மீரா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா தயாரிப்பில் விஜய் ஆண்டனிக்கு பாத்திமா உறுதுணையாக இருக்கிறார்.மகள் மீராவுக்கு 16 வயதுதான் ஆகிறது. இந்த சூழலில் மீரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். விஜய் ஆண்டனியின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மகள் உயிரிழந்தது விஜய் ஆண்டனியை நிலைகுலைய செய்துள்ளது.
பாத்திமா பதிவு: இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தனது மகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் போட்டிருக்கும் ட்வீட் அனைவரையும் உருக செய்திருக்கிறது. அந்த ட்வீட்டில், "என் வலிமைக்கு பின்னால் இருக்கும் சக்தி. என் கண்ணீருக்கு ஆறுதல், குறும்புகளால் என் மன அழுத்தத்திற்கு காரணமான தங்கக்கட்டி, செல்லக்குட்டி மீரா விஜய் ஆண்டனி" என குறிப்பிட்டிருக்கிறார். மீரா தான் படித்த பள்ளியில் மாணவர் சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக பாத்திமா இந்த பதிவை பகிர்ந்திருந்தார்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











