Vijay Birthday: ஆனந்தம் ஆனந்தம் பாடும்.! 90ஸ் கிட்ஸை கிறங்கடித்த விஜய்யின் சிறந்த காதல் பாடல்கள்
சென்னை: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையடுத்து திரை பிரபலங்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் காதல் பின்னணிக் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான விஜய், இன்று மாஸ் ஹீரோவாக கலக்குகிறார்.
இந்நிலையில், விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு காரணமாக இருந்த 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் காதல் பாடல்களை இங்கே பார்க்கலாம்.
விஜய்யின் 90ஸ் கிட்ஸ் லவ் சாங்ஸ்:இன்றைய கோலிவுட் மாஸ் ஹீரோ என்றால் அது விஜய் தான். சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைத்து தரப்பு ரசிகர்களின் தளபதியாக கொண்டாடப்படுகிறார். தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மூலம் திரையுலகில் அறிமுகமானாலும், அடுத்தடுத்து பல தடைகளையும் சோதனைகளையும் கடந்து இன்று டாப் ஹீரோவாக வளர்ந்துள்ளார். விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தது பாடல்கள் தான்.

1990களில் ரசிகர்களை கிறங்கடித்த மெலடிகளில் விஜய்யின் பாடல்களுக்கு தனி இடம் உண்டு. அப்படி வெளியான பாடல்கள் பெரும்பாலும் இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இருப்பது தான் அதன் சிறப்பே. 90ஸ் ரசிகர்களை கிறங்கடித்த விஜய்யின் காதல் பாடல்கள், இன்றைய 2கே கிட்ஸ்களுக்கும் வரப்பிரசாதமாக உள்ளன. அதில் சிறந்த 10 பாடல்களை இங்கே பார்க்கலாம்.
1. 'ஒரு கடிதம் எழுதினேன்' சாங் தான் விஜய் ரசிகர்களால் என்றும் நினைவில் வைத்திருக்கக் கூடிய முதல் காதல் பாடல். தேனிசைத் தென்றல் தேவா இசையில் விஜய்யின் குரலில் தொடங்கும் இந்தப் பாடலை, எஸ்பிபி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பார். தேவா படத்தில் இடம்பெற்ற 'ஒரு கடிதம் எழுதினேன்' பாடலை இன்னும் பல வருடங்கள் ஆனாலும் மறக்கவே முடியாது.

2. 'அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்' பாடலை விஜய் ரசிகர்கள் முணுமுணுக்காத நாள் இருக்குமா எனத் தெரியவில்லை. இளையராஜா இசையில் விஜய்க்கு அமைந்த முதல் சூப்பர் மெலடியாக இதனைக் கூறலாம். உன்னி கிருஷ்ணன், ப்ரீத்தி உத்தம்சிங் இருவரும் இணைந்து 90ஸ் கிட்ஸ் காதலர்களை உருக வைத்தனர். விஜய்யின் மெலடி பாடல்களை எந்த வரிசையில் எடுத்துப் பார்த்தாலும் இது அல்லாஹ்வின் ஆணைப்படி முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும்.

3. 'ஆனந்தம் ஆனந்தம் பாடும்' பாடல் 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என பிரிக்க முடியாதபடி காதலர்கள் அனைவருக்குமான தேசிய கீதம் எனலாம். விஜய்யின் கேரியரில் முதல் சில்வர் ஜுப்ளி ஹிட்டாக அமைந்தது பூவே உனக்காக படம் தான். அதற்கு படத்தின் கதையும் பாடல்களும் தான் மிக முக்கியமான காரணம். அதிலும் 'ஆனந்தம் ஆனந்தம்' பாடல் ஆல்டைம் ஃபேவரைட், எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் உன்னி கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடலை, இப்போதும் பல முன்னாள் காதலர்கள் தங்களுக்குள் இசைத்துக்கொண்டே இருப்பார்கள்.

4. 'ஏன் பெண்ணென்று பிறந்தாய்' பாடல் விஜய் கேரியரில் ஒரு கோல்டன் மெலடியாக அமைந்தது. 'லவ் டுடே' படத்தில் சிவா இசையில் உருவான இந்தப் பாடலை முஹம்மது அஸ்லம் ஒரு வெர்ஷனாகவும், உன்னி கிருஷ்ணன் இன்னொரு வெர்ஷனாகவும் பாடியிருப்பார்கள். இதில் முஹம்மது அஸ்லம் பாடிய வெர்ஷனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். லவ் டுடே படத்தில் இடம்பெற்ற 'என்ன அழகு எத்தனை அழகு' பாடலும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

5. 'பூவே பூவே பெண்பூவே' பாடல் விஜய் ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் மெலடியாக அமைந்தது. ஒன்ஸ்மோர் படத்தில் தேவாவின் இசையில் உருவான இப்பாடலை எஸ்.என் சுரேந்தர், சித்ரா இருவரும் பாடியிருந்தனர். இந்தப் பாடலில் வரும் 'காதலுக்கு என்றும் ஜனகணமன இல்லையே' என்ற வரி, காதலர்களை ஒன்ஸ்மோர் மோடில் கேட்க வைத்தது. அதேபோல், "காதலின் வயது எத்தனை கோடி, அத்தனை வருசம் நாம் வாழணும் வாடி" என்ற வரிகளும், "ஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும்" என்ற வரிகளும் இன்றைக்கும் பலரின் நினைவுகளில் புதைந்துவிட்டன.

6. 'என்னை தாலாட்ட வருவாளா' பாடலுக்கு முன், பின் என விஜய்யின் கேரியரை இரண்டாக பிரித்துவிடலாம். அப்படியொரு மாயாஜாலத்தை நிகழ்த்தியது காதலுக்கு மரியாதை படமும், அதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும். விஜய், ஷாலினி, இயக்குநர் பாசில், இசைஞானி இளையராஜா என இக்கூட்டணியில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தால் ரசிகர்கள் பித்துப்பிடித்து திரிந்தனர். 'என்னை தாலாட்ட வருவாளா' பாடல் மட்டுமில்லாமல் காதலுக்கு மரியாதை ஆல்பமே ரசிகர்களின் ஃபேவரைட் தான். ஆனாலும், இந்தப் பாடலில் இருப்பது காதலின் மெஞ்ஞான ஜீவன் கொண்ட சுகம்.

7. 'என்னவளே அடி என்னவளே' என்ற இந்தப் பாடலும் விஜய்யின் சிறந்த மெலடிகளில் ஒன்று. நினைத்தேன் வந்தாய் படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருந்தார். மனோவின் குரலும், ஆங்காங்கே ஒலிக்கும் கிதாரின் இசையும் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. அதேபோல், அனுராதா ஸ்ரீராமின் குரலும் 'என்னவளே அடி என்னவளே' பாடலை இன்றைக்கும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்க வைத்துள்ளது.

8. 'மேகமாய் வந்து போகிறேன்' பாடல் விஜய் ரசிகர்களின் இன்னொரு ஃபேவரைட்டாக அமைந்தது. துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் உருவான இந்தப் பாடலை, ராஜேஷ் கிருஷ்ணன் பாடியிருந்தார். பொதுவாகவே கல்லூரி விழாக்களில் குத்து பாடல்களுக்கு நடனமாடுவதை தான் மாணவர்கள் விரும்புவார்கள். ஆனால் அந்த வரலாற்றை மாற்றியதில் 'மேகமாய் வந்து போகிறேன்' பாடலுக்கு முக்கியமான இடம் உள்ளது. பள்ளி, கல்லூரி விழாக்களில் 90ஸ் மாணவர்கள், மாணவிகளால் ஆடி கொண்டாடப்பட்ட பாடலாக இதனைக் கூறலாம்.

9. 'ஓ தென்றலே' என்ற இந்த சாங் விஜய் 90ஸ் ஹிட்ஸில் மனதை மயக்கும் ஒரு ஆத்மார்த்தமான மெலடி பாடலாகும். என்றென்றும் காதல் படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு மனோஜ் பட்நாகர் இசையமைத்திருந்தார். இவர்தான் இப்படத்தின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எங்கேயோ கேட்ட எதோ சில இந்தி பாடல்களின் சாயல் இருந்தாலும், ஆழ்மனதில் அப்படியே பதிந்துவிடும் பத்து பொருத்தங்களும் 'ஓ தென்றலே' பாடலில் கேட்கலாம். என்றென்றும் காதல் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது.

10. 'நிலவு பாட்டு' என்ற கண்ணுக்குள் நிலவு படத்தில் இடம்பெற்ற இப்பாடல் விஜய்யின் சிறந்த காதல் மெலடிகளில் கண்டிப்பாக இடம்பிடித்துவிடும். அதே காதலுக்கு மரியாதை கூட்டணியான விஜய், ஷாலினி, பாசில், இளையராஜா மீண்டும் இணைந்த படம் கண்ணுக்குள் நிலவு. காதலுக்கு மரியாதை போல இந்தப் படம் ஹிட்டாகவில்லை என்றாலும், பாடல்கள் ரசிகர்களை மகிழ்விக்க தவறவில்லை. ஹரிஹரன் குரலில் 'நிலவு பாட்டு' பாடலை கேட்க கேட்க காதல் நிலவில் இருந்து அருள்பாலிக்கும்.


Click it and Unblock the Notifications











