Vijay: ”விஜய் கெத்து காட்டியதற்கு காரணம் என்ன..” வசமாக கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை. சென்னையில் இருந்துகொண்டே அவர் பங்கேற்காதது ஏன் என ப்ளூ சட்டை மாறன் எழுப்பிய கேள்வி விஜய் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
விஜய்யை வம்பில் மாட்டிவிடும் ப்ளூ சட்டை மாறன்: விஜய் நடிப்பில் கடந்தாண்டு வாரிசு, லியோ படங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கோட். லியோ ரிலீஸுக்கு முன்னரே இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இதனால், இந்தாண்டு ஜூன் மாதம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த மாதமே இந்நிகழ்ச்சி நடக்கவிருந்து அதன் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டார் முன்னிலையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில், ரஜினி, கமல், சூர்யா, வடிவேலு, நயன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அதேநேரம் விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவில்லை. அஜித், சிம்பு ஆகியோர் வெளிநாடுகளில் இருப்பதால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால், விஜய் படப்பிடிப்புக்காக சென்னையில் தான் இருக்கிறார். அப்படி இருந்தும் அவர் கலந்துகொள்ளாதது விமர்சனத்துக்கு உள்ளானது. ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்களே கலந்துகொண்ட நிலையில், விஜய் இப்படி செய்யலாமா என பேச்சுகள் எழுந்தன.

அதேபோல், அவர் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார், ஆனால் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு வரவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், இப்போது ப்ளூ சட்டை மாறனும் கொளுத்திப் போட்டுள்ளார். அதாவது கலைஞர் நூற்றாண்டு விழாவில் விஜய் கலந்துகொள்ளாதது பற்றி ட்வீட் போட்டுள்ளார். அதில், "சென்னையில் இருந்துகொண்டே.. கலைஞர் 100 நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளாமல் கெத்து காட்டியதற்கு காரணம் என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது கடந்த சில மாதங்களாகவே விஜய் அரசியலில் களமிறங்கும் நோக்கத்துடன் வலம் வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, வெள்ள நிவாரணம் என பல உதவிகளை செய்து வருகிறார். இதனால் அவர் தனியாக அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம் என செய்திகள் வெளியாகின்றன. அதன் காரணமாக தான் கலைஞர் நூற்றாண்டு விழாவில் விஜய் பங்கேற்கவில்லை என ப்ளூ சட்டை மாறன் சொல்லாமல் சொல்லியதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்விட்டர் பதிவுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











