Vijay: சிஎம்..மா.. விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது.. ஒரே போடாக போட்டு பொளந்த தேவயானி கணவர்!
சென்னை: நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இப்படி இருக்கும்போது அடுத்த ஆண்டு அதாவது 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறிவிட முடியும் என்ற நம்பிக்கையில் தனது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக அவர் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, " அரசியல் என்பது தியாகத்தால் ஆனது. ஆனால் விஜய் கடந்த 30 ஆண்டுகளாக வேடிக்கை மட்டுமே காட்டி மக்களிடத்தில் சென்றுள்ளார். அப்படி இருக்கும்போது இன்றைக்கு நான் மக்களுக்கு சேவை செய்ய வருகிறேன் என்றால், மக்கள் அவரை வேடிக்கை பார்க்கத்தான் வருவார்கள். விஜய் படப்பிடிப்பு தளத்திலேயே யாரிடமும் பேச மாட்டார். அப்படி இருக்கும்போது இன்றைக்கு மக்களுடன் மக்களாக இருக்க போகிறேன் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசியலில் திமுக மற்றும் அதிமுக தான். இந்த இரண்டு கட்சிகளைக் கடந்து வேறு யாராலும் வர முடியாது. நடிகர் விஜய் இன்றைக்கு செய்ய வேண்டியது, திமுக அல்லது அதிமுகவுடன் இணைந்து பயணித்து, தேர்தலில் வென்று, எம்.எல்.ஏவாக மாறலாம். ஏன், அமைச்சராக கூட மாறலாம். ஆனால் அவர் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க முடியாது. விஜயால் வெல்லவே முடியாது. அவர் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை.
டெபாசிட் கூட வாங்க முடியாது: அரசியலில் யாரோ ஒருவர் வந்து காப்பாற்றுவார் என்ற மாயத்தோற்றம் உள்ளது. ஆனால் அரசியல் என்பது அப்படிப்பட்டது கிடையாது. அரசியல் என்பது ஒரு நிர்வாகம். சினிமாவில் உச்சத்தில் இருந்து கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள் ஏராளம், ஆனால் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர் என்றால் அது விஜய் மட்டும் தான். அரசியலில் பல வலிகளையும் வேதனைகளையும் எதிர்கொள்ளவேண்டி இருக்கும். அது விஜய்யால் முடியாது.

அடிபட வேண்டும்: விஜய் பார்த்து பார்த்து பாதுகாக்கப்பட்ட பூந்தோட்டம் அவர். விஜய் போன்றவர்கள் கஷ்டத்தையே பார்க்காதவர்கள். படப்பிடிப்புத் தளத்திலேயே அப்படி இருந்தவர்கள்தான். சினிமா உலகமும் அவரைப் பாதுகாப்பாகத்தான் வைத்திருக்கிறது. அவர் ஒரு சாப்டரை க்ளோஸ் செய்து விட்டு, இன்னொரு சாப்டர் தொடங்கலாம் என்று நினைக்கிறார். ஆனால் அதற்கு இன்னும் சில காலம் ஆகும். இதற்கு எல்லாம், நிஜமாகவே வெயிலில் கருக வேண்டும், மழையில் முழங்கால் அளவு தண்ணீரில் நிற்க வேண்டும். கூட்டத்தில் அடிபட வேண்டும். இவையெல்லாம் சினிமாவில் நீங்கள் செய்யலாம். ஆனால் நிஜத்தில் செய்ய வேண்டும் என்றால் அதை நீங்கள் சிறு வயதில் இருந்தே செய்திருக்க வேண்டும்.
எது அரசியல்: கூட்டம் சேர்ப்பதோ, கூட்டத்தை சேர்த்துக் கொள்வதோ, கூட்டம் சேருகிறது என்பதற்காக அரசியலுக்கு வருவது என்பதோ ஒரு அறியாமைதான். முதலமைச்சராகித்தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எதுவும் இல்லை அதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











