படுமோசம்.. கன்னத்தை கிள்ளி முத்தம்.. விஜயகாந்துக்கு அஞ்சலி செய்ய வந்த விஜய்.. ரசிகர்கள் அட்டூழியம்!
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலை இறுதியாக சந்தித்து இறுதி அஞ்சலி செலுத்த நள்ளிரவில் நடிகர் விஜய் வந்த நிலையில், அந்த நேரத்திலும் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் இருந்தது. அதில், சில ரசிகர்கள் செய்த செயலை தளபதி விஜய் ரசிகர்களே கடுமையாக திட்டி வீடியோக்களை வெளியிட்டு கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
சிறு வயதில் இருந்தே தனது அப்பா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வந்ததை பார்த்தே வளர்ந்தவர் தான் நடிகர் விஜய். அப்பா இயக்கிய செந்தூரப் பாண்டி படத்திலும் விஜய்க்கு ஒரு ரோல் கொடுத்து சினிமாவில் விஜய்க்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுக்க நினைத்தவர் விஜயகாந்த்.

தம்பி எப்பவும் தோற்க மாட்டேன் அண்ணா: செந்தூரப்பாண்டி அண்ணனோட தம்பி விஜய் என்னைக்குமே எங்கேயுமே தோற்க மாட்டேன் அண்ணா என விஜய் பேசிய வசனங்கள் இன்றும் அப்படியே ரசிகர்கள் மத்தியில் மறக்காமல் நினைவில் உள்ளது. சினிமாவில் தொடர்ந்து வசூல் நாயகனாக வலம் வரும் விஜய் இந்த ஆண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை வீழ்த்தி மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ளார். அடுத்து தளபதி 68 படத்தில் நடித்து வரும் விஜய் கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து அவரை பார்த்துள்ளார்.
கண் கலங்கிய விஜய்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், விவேக் என எந்தவொரு பிரபல நடிகர் உயிரிழந்தாலும் ஷூட்டிங்கை எல்லாம் ரத்து செய்து விட்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இறுதி மரியாதையை நேரில் வந்து செலுத்தி வருகிறார் விஜய். விஜயகாந்தை விஜய் சந்திக்க வரமாட்டார் என்றே பலரும் விமர்சித்து வந்த நிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஹைதராபாத்தில் இருந்து விஜய் சென்னைக்கு வந்து நள்ளிரவில் விஜயகாந்த் உடலை பார்த்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.
கூட்ட நெரிசல்: விஜயகாந்த் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட நிலையில், மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாது என நினைத்த பிரேமலதா விஜயகாந்த் உடனடியாக தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். ஆனால், கோயம்பேடு ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்ட நெரிசல் அலைமோதியது. பாலத்துக்கு மேலும், கீழும் ஒரே மனித தலைகள் தான் தெரிந்தது. இரவு நேரத்திலும் கூட்ட நெரிசல் விஜய் வரும் சமயத்திலும் கொஞ்சம் கூட குறையவில்லை.
கிள்ளி முத்தம்: உயிரிழந்த ஒரு மனிதருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் கண்ணீருடன் வந்து செல்லும் நேரத்திலும் ரசிகர்கள் அப்படி அலை மோதிக் கொண்டு அவர் மீது விழுவதும், அந்த பச்சை சட்டை போட்ட நபர் கிள்ளி முத்தம் கொடுப்பதும், தலையை தொட்டு வணங்குவதும் என எந்த நேரத்தில் எந்த இடத்தில் என்ன செய்வதென்றே தெரியாத அளவுக்கு ரசிகர்கள் ஏன் அட்டூழியம் செய்கின்றனர் என விஜய் ரசிகர்களே சோஷியல் மீடியாவில் இதெல்லாம் ரொம்ப தப்பு நண்பா என அந்த வீடியோவை ஷேர் செய்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
செருப்பு வீசப்பட்டதா?: அதை விட மோசமாக செருப்பை கொண்டு விஜய் மீது வீசியதாகவும் புகார்கள் கிளம்பி உள்ளன. விஜய் வெளியே போ என விஜயகாந்த் ரசிகர்களும் கோஷம் போட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்களின் மரண நிகழ்வில் சில மீடியாக்கள் அலை மோதிக் கொண்டு கவர் செய்வதும் இறுதி அஞ்சலி செலுத்த வரும் நடிகர்களை ரசிகர்கள் தொல்லை செய்வதும் கூடாது என்கிற குரல் ஒலித்து வருகிறது. ஏற்கனவே விஜய் ஆண்டனியின் மகள் மரணத்தின் போதும் இதே போன்ற ஒரு பிரச்சனை வெடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











