இரண்டு தொகுதியில் போட்டியிடும் விஜய்.. கேப்டன் பட வசனத்தை போட்டு நார் நாராக கிழிக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மார்ச் 29ஆம் தேதி தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தார். குறிப்பாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான 234 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரி சட்டப்பேரவைக்கு 30 வேட்பாளர்களையும் அறிவித்தார். இதில் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இப்படி இருக்கும்போது நெட்டிசன்கள் தொடங்கி, திமுக, அதிமுக, நாம் தமிழர் என மற்ற கட்சியினர் பலரும் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.
அதாவது, விஜய்க்கு தான் பயம் இல்லையே, மொத்த தமிழ்நாடும் தனக்கு ஆதரவாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறார், விஜி இருக்கிறார், நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று மேடைக்கு மேடை பேசுகிறார் அப்படி இருக்கும் போது எதற்காக இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார். வெற்றி பெறுவது நிச்சயம் என்றால் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டியது தானே? எதற்காக இரண்டு தொகுதியில் போட்டியிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதேபோல் நெட்டிசன்கள் சிலர் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் படத்தின் காட்சியை பகிர்ந்து விஜய்யை விமர்சித்து வருகிறார்கள். அதாவது, ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் போட்டியிட கூடாது. காரணம் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வென்ற பின்னர், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்து, அதன் பின்னர் அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த சொல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது. கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு வரி கட்டும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா? அரசியல்வாதிகளின் ஈகோவுக்காக மக்களை முட்டாளாக்குவது எந்த வகையில் நியாயம்" என்று கேள்வி எழுப்பும் காட்சியைப் பகிர்ந்து, அன்றே சொன்னார் கேப்டன் விஜயகாந்த், மக்களை முட்டாளாக்க துடிக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் மார்ச் 30ஆம் தேதியில் இருந்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால், தவெகவினர் மிகவும் பரபரப்பாக வேலை செய்ய தயாராகி வருகிறார்கள். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் எப்படி இருக்கும் என்று பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











