Kingdom: விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட பேனர்களை கிழித்த நாம் தமிழர் கட்சியினர்.. என்ன காரணம்?
ராமநாதபுரம்: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளியான படம் கிங்டம். படம் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் இருப்பதாக படம் பார்த்த பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இது மட்டும் இல்லாமல் படத்தின் கதைக்களம் இலங்கையாக இருப்பதால், பலரும் படம் இலங்கைத் தமிழர்களின் போரை கொச்சைப் படுத்தும் விதமாக இருப்பதாகவும், இலங்கைத் தமிழர்களை தரக்குறைவாக விமர்சிப்பது போலவும் இருப்பதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஜெகன் தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியின், தியேட்டரில் ஒட்டப்பட்ட படத்தின் பேனரைக் கிழித்தார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கிங்டம் படத்தை, நானியை வைத்து ஜெர்ஸி படத்தை இயக்கிய இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கியுள்ளார். இப்படத்தில், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும், சத்யதேவ் வில்லனாகவும் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், அனிருத்தின் பின்னணி இசை படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது என படம் பார்த்த பலரும் பாராட்டி இணையத்தில் பதிவிட்டார்கள். படம் ரிலீஸ் ஆன தினத்தில் ஹைதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு நிகரான அளவில் சுமார் 42 அடி உயரத்திற்கு அனிருத்துக்கு கட்-அவுட் வைத்து கொண்டாடினார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்திய திரையுலகில் இளையராஜாவுக்குப் பின்னர் ஒரு இசையமப்பாளருக்கு கட்-அவுட் வைக்கப்பட்டது அனிருத்துக்குத்தான்.
ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கதை, விஜய் தேவரகொண்டா தனது அண்ணனைத் தேடி ஸ்பை ஆக பயங்கரவாத கும்பலுக்குள் ஊடுருவும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நிதானமான அதே நேரத்தில் உணர்ச்சிமிக்க நடிப்பு, வசன உச்சரிப்பு ஆகியவை படத்தின் திரைக்கதைக்கு பக்கபலமாக இருந்துள்ளது என தெலுங்கு ரசிகர்கள் பாராட்டினார்கள். ஆனால் படம் தமிழில் படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.
பேனர் கிழிப்பு காரணம்: இப்படியனா நிலையில் படக்குழுவினருக்கு தலைவலி கொடுக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது சீமானின் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள ஜெகன் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கிங்டம் படத்தின் பேனரைக் கிழித்து அகற்றினர். காரணம், படத்தில் இலங்கைத் தமிழர்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஈழத்துப் போரை கொச்சைப் படுத்தும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வசூல் & ஓடிடி ரிலீஸ்: படம் இதுவரை அதாவது கடந்த ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 44 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டும் இல்லாமல் படத்திற்கு வெளிநாட்டில்ம் நல்ல வசூல் எனக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி மற்றும் வார் 2 படங்கள் வெளியாகவுள்ளதால் இந்த வாரம் புதிய படங்கள் எதுவும் வெளியாகது என்பதால் இந்த வாரத்தில் படம் நல்ல வசூலை குவித்திவிடும் என படக்குழு எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் போது வேறு ஏதாவது பிரச்னைகள் எழுமா என்ற கேள்வி படக்குழுவினர் மத்தியில் இப்போது எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











