Vijay Deverakonda: அது சூதாட்ட விளம்பரமே இல்லை.. கேமிங் ஆப் தான்.. விஜய் தேவரகொண்டா பலே விளக்கம்!
ஹைதராபாத்: இலங்கை தமிழர்களை இழிவுப்படுத்தி படம் எடுத்ததாக கிங்டம் திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளுக்குச் சென்று படத்தை நிறுத்தவும், போஸ்டர்களை கிழித்தும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்த ஆர்பாட்டம் காரணமாக தமிழில் கிங்டம் படத்திற்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இதுவொருபுறம் என்றால் இன்னொரு புறம் சூதாட்ட செயலிக்கு விளம்பரம் பண்ண வழக்கில் சிக்கியுள்ள விஜய் தேவரகொண்டா இன்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
சட்ட விரோதமாக சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிரபலங்களை அமலாக்கத்துறை தொடர்ந்து குறி வைத்து வரும் நிலையில், விஜய் தேவரகொண்டா இன்று விசாரணைக்கு ஆஜரான நிலையில், அதுதொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரம்: ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்கள் தொடர்பான சர்ச்சை தெலுங்கானா மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி போன்ற திரை நட்சத்திரங்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள், தொலைக்காட்சி நடிகர்கள் எனப் பலரின் பெயர்கள் அடிபட்டன.
இந்த விவகாரத்தில் பெரும் பணமோசடி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை (ED) பலருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 6ம் தேதியான இன்று நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை முன் ஆஜரானார்.
விஜய் தேவரகொண்டா விளக்கம்: விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் தேவரகொண்டா, தான் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்தார்.
"நான் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காக அழைக்கப்படவில்லை. நான் சில கேமிங் செயலிகளை மட்டுமே விளம்பரப்படுத்தினேன். இது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் விளக்கமளித்தேன். எனவே, ஊடகங்கள் 'சூதாட்ட செயலி விளம்பரம்' என்பதை நீக்கிவிட்டு, 'கேமிங் செயலி விளம்பரம்' என்று மாற்ற வேண்டும்," என அவர் வலியுறுத்தினார்.
மேலும், "கேமிங் செயலிகள் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டவை. அவை சட்டவிரோதமானவை அல்ல. இந்த சர்ச்சையில் எனது பெயர் ஏன் வந்தது என்று அவர்களுக்கே தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
சூதாட்ட செயலிகளும், கேமிங் செயலிகளும் வேறுபட்டவை என்றும், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றும் விஜய் தேவரகொண்டா சுட்டிக்காட்டினார். கேமிங் செயலிகளுக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில அரசுகளின் அனுமதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"உங்களுக்கு சந்தேகம் இருந்தால், கூகிளில் 'டாப் 10 கேமிங் ஆப்ஸ்' என்று தேடவும். அதில் உங்களுக்குத் தெரியும். அத்தகைய பதிவு செய்யப்பட்ட செயலிகள், நமது கிரிக்கெட் அணி, ஒலிம்பிக் அணி மற்றும் பிற விளையாட்டுகளுக்கு ஸ்பான்சர்களாக உள்ளன. அவை ஐபிஎல், கபடி, கைப்பந்து லீக்குகளை ஆதரிக்கின்றன," என்று அவர் விளக்கினார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க வேண்டியிருந்ததால், தனது வங்கி அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்ததாக விஜய் தேவரகொண்டா தெரிவித்தார். இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"நான் அதிகாரிகளிடம் சொன்ன விவரங்கள் அனைத்தும், நான் உங்களிடம் சொன்னதுதான். எனது வங்கி விவரங்கள், ஏஜென்சி விவரங்கள், ஸ்பான்சர் செய்யப்பட்ட செயலிகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்கினேன். எனது விளக்கத்தில் அதிகாரிகள் திருப்தி அடைந்தனர். விரைவில் அவர்கள் உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்," என்று அவர் கூறினார்.
சூதாட்ட செயலிகளை அனுமதிக்க வேண்டுமா வேண்டாமா என்பது உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகளைப் பொறுத்தது என்றும் விஜய் தேவரகொண்டா கூறி முடித்தார்.


Click it and Unblock the Notifications











