Vijay Divorce: திருமணத்தை மீறிய உறவில் விஜய்? இந்திய தண்டனைச் சட்டம் அளிக்கும் தண்டனை என்ன?
சென்னை: நடிகர் விஜய் வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும், அவருடனான திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். விஜய்யின் மனைவி சங்கீதாவின் இந்த விவாகரத்து கோரிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், விஜய் மீது அவர் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய்க்கு இந்திய தண்டனைச் சட்டம் என்ன மாதிரியான தண்டனைகளை வழங்குகிறது என்பது குறித்து காணலாம்.
அதாவது, " எனது கணவர் விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். இவர் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்பதை நான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே கண்டுபிடித்துவிட்டேன். அப்படி கண்டுபிடித்த பின்னர் விஜய் அந்த உறவை துண்டிப்பதாக என்னிடத்தில் கூறினார். ஆனால் அவர் அந்த உறவை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்.

இதை எல்லாம் கேள்வி கேட்ட எனக்கு எனது வீட்டிற்குள்ளேயே அடிப்படையான உரிமைகள் முதற்கொண்டு மறுக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்தோம். நடிகையுடன் அவர் வெளிநாடுகளுக்கு ஒன்றாக செல்வதும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒன்றாக செல்வதுமாக இருக்கிறார்கள். அப்போது அவர்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியில் பகிர்கிறார்கள். அவை எனக்கும் எனது குழந்தைகளுக்கும் மன சங்கடத்தையும் அவமானத்தையும் கொடுக்கிறது.
விவாகரத்து கோரிக்கை: விஜய்யுடனான திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதுடன், விஜய்யின் வருமானம் மற்றும் சொத்துக்கு ஏற்ற வகையில் எனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்குக்கான செலவை விஜய்யே ஏற்க வேண்டும் என்றும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை விஜய்யின் அதாவது தனது புகுந்த வீடான நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

நடிகையின் பெயர்: மேலும் விஜய் தரப்பில் எனக்கு அழுத்தமோ, நெருக்கடியையோ கொடுத்தால் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையின் பெயரைச் சொல்லுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படி இருக்கையில் இந்திய தண்டனைச் சட்டம் திருமணத்தை மீறிய உறவில் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனைகளை வழங்குகிறது? அதில் விஜய்க்கு என்ன மாதிரியான தண்டனைகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்ற பல கேள்விகள் பலருக்கும் எழுந்து வருகிறது.
தண்டனை என்ன? இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 497இன் படி 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த சட்டப் பிரிவு கடந்த 2018 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் திருமணத்தை மீறிய உறவு தண்டனைக்குரிய குற்றம் அல்ல. திருமண உறவை மீறிய ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தண்டனையும் இல்லை அபராதமும் இல்லை. பாதிக்கப்படுவதாக நினைப்பவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கீதாவின் குற்றச்சாட்டின் படி, விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டாலும் விஜய்க்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ இல்லை.


Click it and Unblock the Notifications











