விஜயை தப்பா பேசுவியா?.. சொருகிடுவேன்.. விமர்சகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.. கைவிட்ட தவெக?
சென்னை: உங்கள் விஜய் நா வரேன் என்கிற பெயரில் விஜய் அரசியல் சுற்றுப்பயணத்தை அறிவித்து திருச்சியிலிருந்து தொடங்கினார். கடந்த வாரம் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கட்சி தொண்டர்களையும், மக்களையும் சந்தித்தார். கரூரில் அவர் பேசியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் திமுகவை தொடர்ந்து டார்கெட் செய்துவருகிறார். அதற்கு திமுகவினரும் தங்களது பதிலடியை கொடுத்துவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க தொண்டர்களையும், மக்களையும் சந்தித்து பரப்புரை மேற்கொள்ளும் வகையில் உங்கள் விஜய் நா வரேன் என்ற அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் வாராவாரம் சனிக்கிழமை இதனை அவர் செய்துவருகிறார்.
கரூர், நாமக்கல்: அந்தவகையில் கடந்த வாரம் கரூர் மற்றும் நாமக்கல்லுக்கு சென்றார். இரண்டு ஊர்களுக்குமே குறித்த நேரத்தை தவிர்த்து மிக தாமதமாகத்தான் வந்து சேர்ந்தார் அவர். கரூரில் அவர் 7 மணிக்குத்தான் தனது பேருந்தோடு நுழைந்தார். ஆனால் விஜய்க்காக காத்திருந்த மக்கள் கூட்டம் அதிகப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கரூரில் முகாமிட ஆரம்பித்தார்கள்.
40 பேர் உயிரிழப்பு: ஒருவழியாக விஜய் வந்து வழக்கம்போல் சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு சென்றார். அந்தப் பேச்சின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். விஜய்யோ பேச்சை முடித்துவிட்டு சிட்டாக பறந்து சென்னைக்கு சென்றுவிட்டார். இத்தனைக்கும் சென்னை விமானம் ஏறுவதற்கு முன்பே இந்த செய்தி அவருக்கு சென்றுவிட்டது. ஆனால் அவரோ எந்த ரியாக்ஷனையும் காட்டிக்கொள்ளவில்லை.

மூன்றாம் நாளில் வீடியோ: இந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு விசாரிக்க ஆணையம் அமைத்திருக்கிறது. முதலில் இதுதொடர்பாக ட்வீட் போட்ட அவர்; அடுத்ததாக மூன்றாவது நாளில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதற்கிடையே இந்த துயரத்துக்கு காரணம் விஜய்தான் என்று பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தவெகவினரும் அவதூறு பரப்பியதால் கைது செய்யப்பட்டார்கள்.
வீடியோவும் சொதப்பல்: நிலைமை கை மீறி போய்விட்டதை உணர்ந்துகொண்ட விஜய் ஒருவழியாக மூன்றாவது நாளில் வீடியோவில் காட்சியளித்தார். அதில், இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துவிட்டு; 'சி.எம்.சார் பழி வாங்கணும்னு நினைத்தால் என்னை கைது செய்யுங்கள். நான் வீட்டிலோ அல்லது ஆஃபிஸிலோதான் இருப்பேன்' என பேசினார். இதனைப் பார்த்த பெரும்பாலானோர், விஜய்யின் முதிர்ச்சியற்ற பேச்சு இது. தனது தொண்டர்களை இதன் மூலம் தூண்டிவிடுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மீது பழியை போட்டு பிரச்னையை திசை திருப்ப பார்க்கிறார் என்று கடுமையாக கண்டித்தார்கள். சொல்லப்போனால் அவர் மீது சாஃப்ட் கார்னர் வைத்திருந்தவர்களோ அந்த வீடியோவுக்கு பிறகு அவரை கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
தொண்டர் கைது: சூழல் இப்படி இருக்க நேற்று ரோஸ்ட் பிரதர்ஸ் என்கிற பெயரில் திரை விமர்சனம் செய்யும் இரண்டு பேர் செய்தியாளர்களிடம் பேசுகையில் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்கள். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் பதில் சொல்ல முடியாமல் பாதியில் கிளம்பிய அவரை ரோஸ்ட் பிரதர்ஸ் தடுத்து நிறுத்தினார்கள். அதற்கு அந்த தொண்டரோ, 'மேலே கையை வைத்தால் சொருகிடுவேன். விஜய்யை பற்றியே தப்பா பேசுறிங்களா?. நீங்கள் எல்லாம் ஊர் விட்டு ஊர் வந்தவங்க. நான் இதே அரும்பாக்கம்தான். மாவட்ட செயலாளர் பாலமுருகன் அண்ணன் கடையில்தான் வேலை பார்க்கிறேன்' என கொலை மிரட்டல் தொனியில் பேசினார்.
இந்த வீடியோ பயங்கரமாக பரவிய நிலையில் அந்த இளைஞரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். மேலும், கரூர் சம்பவத்திலிருந்து தவெகவினர் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று பார்த்தால் மேற்கொண்டு மேற்கொண்டு இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படியே போனால் அக்கட்சி கோட்டைக்கு போகாது குழிக்குத்தான் போகும் என்று பலரும் ட்ரோல் செய்தும், கண்டனம் தெரிவித்தும்வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க அவர் தவெகவை சேர்ந்தவரே இல்லை என கட்சி தரப்பிலிருந்து கூறப்பட்டுவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











