33 Years Of Vijayism: இந்த வருசத்தோட எல்லாமே முடியுது.. நன்றி சொல்றதா இல்லை மிஸ் யூ சொல்றதானே தெரியல
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் அதாவது டிசம்பர் 4 ஆம் தேதியுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இன்றைக்கு தமிழ் சினிமாவில் இருக்க கூடிய உச்ச நடிகர்களில் ஒருவராக விஜய் உள்ளார். வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ள ஜன நாயகன் படம் தான் அவரது கடைசி படம். இதனால் இந்த படத்தை வெகு விமர்சையாக வரவேற்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் விஜய்யை அதன் பின்னர் மீண்டும் எப்போது ஸ்கிரீனில் பார்ப்போம் என்ற ஆவல் ரசிகர்களுக்கு இப்போதுமே உள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்யை கொண்டாடி வருகிறார்கள். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கடந்த 1992 ஆம் ஆண்டு நடிகராக காலடி எடுத்து வைத்தவர் விஜய். முதலில் உங்கள் விஜய் என்ற டைட்டில் கார்டுடன் அறிமுகமான விஜய், ஒரு கட்டத்தில் இளைய தளபதி விஜய் ஆக அவதாரம் எடுத்தார். மாஸ் நடிகராக உருவெடுத்து, திரைத்துறையில் பலருக்குமே ஒரு முன் மாதிரியாக விஜய் உருவெடுத்த பின்னர்தான், தளபதி விஜய்யாக மாறினார்.

தமிழ்நாட்டில் இன்றைக்கு விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். அவரது படம் வெளியானால் அசால்ட்டாக பல நூறு கோடிகளை வசூலிக்கும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார். குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை விஜய் படம் என்றால் ஒரு நம்பிக்கையுடனும் குஷியுடனுமே படத்தை பார்க்கிறார்கள். விஜய் படத்தை தயாரிப்பது என்றால், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற போகிறோம் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துவிடுகிறார் விஜய். படம் சரியாக போகவில்லை என்றால் கூட, படத்தின் தயாரிப்பு பணம் வசூலாகிவிடுகிறது. நஷ்டம் என்ற பேச்சுக்கே விஜய் படத்தில் வேலை இல்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய்யை திரையில் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
ரசிகர்கள் மனநிலை: தனது அப்பா இயக்குநர், பணம் போட்டு படம் எடுக்கும் அளவுக்கு இருக்கிறார் என்ற ஆரம்ப காலம் அவருக்கு சொகுசு நிறைந்ததாக மாறிவிடவில்லை. பலரும் விஜய்யை உருவ கேலி செய்தார்கள். இதையெல்லாம் கடந்து வந்தார் என்பதைக் காட்டிலும் எதிர் கொண்டு வந்தார் என்பது இன்னும் சாலப் பொருத்தமாக இருக்கும். அவருக்கு நடிக்க வரவில்லை என்றார்கள், ஆனால் இன்றைக்கு விஜய் திரையில் அழுதால், தியேட்டரில் தேம்பித் தேம்பி அழும் ரசிகர்கள் இருக்கிறார்கள், அவரைப் போலவே நடனமாட வேண்டும் என்று தீவிரமாக பயிற்சி எடுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் ரசிகர்களுக்கு அவரது சிரிப்பு கொண்டாட்டமாக மாறுகிறது, அவரது அழுகை துக்கமாக மாறுகிறது, அவரது அறிவுரை வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் ரசிகர்களையும் பார்க்க முடிகிறது.

ஜன நாயகன்: விஜய் எதிர்கொண்ட போராட்டங்கள், இன்னல்கள், நெருக்கடிகள் இவற்றை எல்லாம் கடந்து அவர் அடைந்த வெற்றிகள் தான் விஜய்யை தமிழ் சினிமாவின் உச்சத்தில் அமர வைத்துள்ளது. சினிமா உலகின் உச்சத்தில் இருக்கிறார், ஜன நாயகன் படத்திற்கு ரூபாய் 235 கோடிகள் சம்பளமாக பெற்றுள்ளார் என்று எல்லாம் தகவல்கள் வருகிறது. இப்படி இருக்கும்போது சினிமாவில் இருந்து விலகுகிறேன், அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகிறேன் என்று முடிவெடுத்து அதற்குண்டான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரசிகர்கள் ஆதங்கம்: அரசியலில் அவருக்கு ஆதரவு அளிக்கும் ரசிகர்களும் விமர்சிக்கும் ரசிகர்களையும் பார்க்க முடிகிறது. ஆனால் திரை வாழ்க்கையில் அவரை கொண்டாடாத ரசிகர்களே, ரசிக்காத ரசிகர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ரசிகர்களின் தளபதியாக இருந்த விஜய் இன்று திரை வாழ்க்கையில் 33 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார். இத்தனை ஆண்டு காலம் மகிழ்வித்த அவருக்கு நன்றி சொல்வதா? சினிமாவில் இருந்து விலகுகிறாரே என்று மிஸ் யூ சொல்வதா? என்று தெரியாமல் குழப்பத்தில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











