Vijay: “விஜய் கட்அவுட்டுக்கு இனிமேல் பால் அபிஷேகம் கிடையாது..” ஷாக் கொடுத்த தளபதி ரசிகர்கள்!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ அடுத்த வாரம் வெளியாகிறது.
அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகும் லியோ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங்கும் தொடங்கியது.

இதனையடுத்து விஜய்யின் லியோ படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என ரசிகர்கள் டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இனிமேல் விஜய் கட்அவுட்டுக்கு இனிமேல் பால் அபிஷேகம் கிடையாது என ரசிகர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
விஜய் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் கிடையாது
விஜய்யின் லியோ திரைப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால், லியோ மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் எப்போதும் போல லியோ ரிலீஸாகும் போதும் ரசிகர்களின் கொண்டாட்டம் உச்சம் தொடும் எனலாம்.
முன்னதாக லியோ ட்ரெய்லர் வெளியான போது, ரோகிணி தியேட்டரில் நடந்த சம்பவங்கள் ரொம்பவே சர்ச்சையானது. அதாவது லியோ ட்ரெய்லர் வெளியான போது, விஜய் ரசிகர்களுக்காக தனியாக ரோகிணி தியேட்டரின் ஒரு ஸ்க்ரீனில் திரையிடப்பட்டது. அப்போது திரையில் விஜய் காட்டிய ஆக்ரோஷத்தை அவரது ரசிகர்கள் ரியலாகவே வெளிப்படுத்தினர். இதனால், ரோகிணி தியேட்டர் நாசமானது தான் மிச்சம்.
400 இருக்கைகள் உட்பட 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை துவம்சம் செய்தனர் விஜய் ரசிகர்கள். இந்தச் சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் தனது ரசிகர்களை கன்ட்ரோல் செய்யத் தவறிவிட்டார். அவரால் தான் ரசிகர்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்கின்றனர். அரசியலுக்கு வர ஆசைப்படும் விஜய், தனது ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என பலரும் விமர்சனம் செய்தனர்.
ஆனாலும், இந்தச் சம்பவம் பற்றி விஜய் வாய் திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ரோகிணி தியேட்டர் நிர்வாகமும் காவல்நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், லியோ ரிலீஸாகும் போது மேலும் பல அசம்பாவிதங்கள் நடக்கலாம் என பொதுமக்களே அச்சப்படுகின்றனர். இன்னொரு பக்கம் லியோ ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையும் சர்ச்சையானது.
இந்நிலையில், விஜய் ரசிகர்கள் எடுத்துள்ள முடிவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது இனிமேல் விஜய்யின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யமாட்டோம் என ரசிகர்கள் கூறியுள்ளனர். அதாவது, இனிமேல் தளபதி விஜய்யின் படம் வெளியாகும் போது, கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யமாட்டோம். அதற்குப் பதிலாக ஏழை எளிய மக்கள், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்போவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











