மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! ரிவென்ஞ் எடுக்கிறார்களா தளபதி ரசிகர்கள்? ட்ரெண்டாகும் இருங்க பாய்
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே அரசியல் தளத்தில் அவரது தாக்கம் இருந்து வந்தது. குறிப்பாக அதிமுகவிற்கும் விஜய்க்கும் ஏழாம் பொருத்தம் எனக் கூறும் அளவிற்கு பல பிரச்னைகள் நடைபெற்றுள்ளது. விஜய்யை அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு கை பார்த்துவிடலாம் என மறைந்த முதலமைச்சர் ஜெ., நினைத்தாரோ என்னவோ, விஜய் மனதில் அது தனிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என பலரும் கூறுகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு ஏற்ற வகையில் விஜய் மற்றும் அவரது ப்ரசிகர்களின் நடவடிக்கைகளும் இருந்தது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகின்றது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம்தான் தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக மாற்றினார். ஆனால் அதற்கு முன்னரே விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தனர். அவர்களை நேரில் வரவழைத்து பாராட்டினார் விஜய். இதனால் விஜய்யும் அரசியல் கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபடப்போகின்றார் என கூறப்பட்டது. அதேபோல் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி, அதன் முதல் மாநில மாநாட்டினை நாளை நடத்தவுள்ளார்.

ஆனால் விஜய் சினிமாவில் இருக்கும்போதே அரசியல் தாக்கம் இருந்தது. அதாவது, கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் விஜய்யின் ரசிகர்கள் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. அந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிமுகவிற்காக பணியாற்றினார்கள். ஆனால் விஜய் அதிமுகவுக்கு ஆதரவாக ஒரு பிரச்சாரம் கூட செய்யவில்லை. அந்த தேர்தலில் அதிமுக பிரமாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 2013ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தின் மூலம் பிரச்னை தொடங்கியது எனலாம். தலைவா படத்தின் டைட்டில் கார்டில் ” தலைவ - டைம் டூ லீட்” என டைட்டில் லீட் இருந்தது.

ஜெ: இந்த டைம் டூ லீட் என்ற வார்த்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மனதில் உறுத்தலை ஏற்படுத்தியது. இதன்காரணமாக படத்தினை ரிலீஸ் செய்வதில் பிரச்னை அரசு தரப்பில் இருந்தே கொடுக்கப்பட்டது. தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் நஷ்டத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பல கட்டங்களாக சந்திக்க முயற்சி செய்தார். போயஸ் கார்டன் வாசலிலும், கொட நாடு எஸ்டேட் வாசலிலும் காத்திருந்தார். ஆனால் ஜெ., விஜய்யை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவின் அமைச்சர்கள் நான்கு பேரை அனுப்பி படம் பார்க்கச் சொன்னார் ஜெ. அதன் பின்னர்தான் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அதற்குள் படம் ரிலீசாகாத ஏமாற்றத்தில் கோவை துடியலூரைச் சேர்ந்த விஷ்ணு என்ற ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
அதிமுக: அதன் பின்னர் விஜய் அரசியல் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதிமுகவை நேரடியாக தாக்கும் வகையில் சர்கார் படத்தில் நடித்தார். படம் முழுவதும் அதிமுகவை விமர்சிக்கும் காட்சிகள் நீண்டு கொண்டே இருந்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.வின் இயற்பெயரான கோமளவள்ளி என்ற பெயரில் வரலஷ்மி சரத்குமார் நடித்தார். இந்தப் படத்திற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இந்நிலையில் விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டுவிழா மேடைகளிலும் அதிமுகவை மறைமுகமாக சாடிப் பேசி வந்தார்.

இருங்க பாய்: இந்நிலையில் விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளதால், அவரது ரசிகர்கள் இணையத்தில் ஒரு வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். அதில், தலைவா மற்றும் சர்கார் படங்களின்போது அதிமுகவினர் நடந்து கொண்டதும், குறிப்பாக சர்க்கார் பட பேனர்களையும் கட்-அவுட்களையும் கிழித்ததை விஜய் ரசிகர்கள் கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த வீடியோக்களை எடிட் செய்த விஜய் ரசிகர்கள் தற்க்போது அதனுடன் மாநாடு ஏற்பாடு வீடியோவையும் இணைத்து, “இருங்க பாய்” என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில், மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! என கேப்ஷனும் இட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











