ஒரு அப்பாவி உயிர் பறிபோயுள்ளதே.. சிறப்பு பேட்டியில் ஆதங்கப்பட்ட நடிகர் விஜய்!
சென்னை : பீஸ்ட் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், நேற்றைய தினம் நடிகர் விஜய் சன் டிவிக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது சொந்த வாழ்க்கை, அரசியல் குறித்த பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். நெல்சன் அடுக்கிய கேள்விகளுக்கு அவர் தனது சந்தோஷம், வருத்தம் உள்ளிட்ட பல விஷயங்களை மிகவும் இயல்பாக பேசினார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது பீஸ்ட். பீஸ்ட் கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பல இடங்களில் விஜய்யின் கட்அவுட்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் வைத்து தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து வருகின்றனர். சில இடங்களில் கட்அவுட்கள் அகற்றப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

5 மொழிகளில் பீஸ்ட் ரிலீஸ்
இந்திய அளவில் 5 மொழிகளில் படம் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இதையொட்டி தமிழில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் படத்தின் பிரமோஷன் முடுக்கி விடப்பட்டுள்ளது. தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

சன் டிவியில் விஜய் பேட்டி
இந்நிலையில் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் பிரமோஷனாக சன் டிவியில் நேற்றைய தினம் பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டி 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் டிவிக்காக கொடுக்கும் பேட்டியாக அமைந்துள்ளது. இதையடுத்து இந்தப் பேட்டியை விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் கண்டு களித்தனர்.

பல விஷயங்களை பகிர்ந்த விஜய்
இந்த பேட்டியில் தன்னுடைய சொந்த வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை தன்னுடைய மகிழ்ச்சி, வருத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விஜய் பகிர்ந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் அரசு துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து அவர் தனது வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டார்.

பயிற்சியின்போது உயிரிழந்த சிறுவன்
புதுக்கோட்டையில் அரசு துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டபோது, 2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனில் தலையில் குண்டு பாய்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தான்.

விஜய் அறிவுரை
இதுருகுறித்து பேசிய விஜய், பின்பு நடைபெற்ற போராட்டங்களை அடுத்து அந்த பயிற்சி தளத்தை அரசு மூடியது, சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுத்தது நல்ல விஷயம்தான் என்றாலும் இத்தகைய பயிற்சி தளங்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைப்பதே சிறப்பானது என்று தெரிவித்துள்ளார்.

பறிபோன அப்பாவி சிறுவன் உயிர்
அந்த பயிற்சி தளம் அங்கு அமைக்கப்படாமல் இருந்திருந்தால் ஒரு அப்பாவி சிறுவனின் உயிர் கண்டிப்பாக போயிருக்காது என்று தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். துப்பாக்கி சுடும்போது எந்த அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதை யோசித்துதான் இத்தகைய பயிற்சி தளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











